கண்ணீர் மழையில் நனைந்த மைதானம்
எடென் பார்க் மைதானத்தின் ஆடுகளத்தில் ஸ்டெயின் அழுதார். ஏபி டிவிலியர்ஸ், டு பிளெசி, மோர்னே மோர்கலும் அவருடன் சேர்ந்து மைதானத்தில் வீழந்து அழுதனர். டிவிலியர்ஸ் எழுந்த போதிலும் அவர்கள் எழுந்திருக்கவில்லை. சக வீரர்களும், தென்னாபிரிக்காவின் பயிற்றுவிப்பாளர்கள் குழுவினர் வந்து அவர்களை சமாதானப்படுத்த முயன்ற போதிலும் அவர்கள் எழுந்திருக்கவில்லை. நிலத்தில் வீழ்ந்திருப்பது அதிகம் வலித்தவேளையே அவர்கள் எழுந்திருந்தனர். அதன் பின்னரும் மோர்க்கல், அம்லா, டுபிலசி ஆகியோர் கண்ணீர்விட்டனர்.அவர்கள் தொடர்ந்தும் அழுத வணண்மிருந்தனர். தொலைக்காட்சி கமராக்கள், மைதானத்தில் அதிர்ச்சியில் உறைந்திருந்த மக்கள் பார்த்திருக்க அவர்கள் அழுதனர்.
இன்று மைதானத்தில் எங்கள் மனவேதனையை பகிரங்கமாக வெளிப்படுத்தினோம் என பின்னர் டிவிலியர்ஸ் தெரிவித்தார். என் வீரர்கள் தங்கள் கண்ணீர் முற்றாக வற்றும் வரை அழுதனர். என்னால் அதனைதான் அவர்களிடமிருந்துஎதிர்பார்க்க முடியும், உண்மையிலேயே இது அதிகமாக வலிக்கின்றது, வேதனையாகவுள்ளது, நாங்கள் நொருங்கிப்போனோம் என்றார் அவர்.
தென்னாபிரிக்கா அணியினர் தங்கள் வேதனையை மறைப்பதற்கு எந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. அவர்கள் தங்கள் கண்ணீர் வழிந்தோடுவதற்கு அனுமதித்தனர். எப்போதும் இறுக்கமாக காணப்படும் அம்லாவும் அழுதார்.தோல்வியில் அவர்கள் வெட்கப்படவில்லை. இன்றைய போட்டி பதட்டம் மிகுந்ததாக காணப்பட்டது,இருஅணிகளும் கடுமையாக மோதின. ஆனால் தென்னாபிரிக்காவை பொறுத்தவரை இவை அனைத்தும் தற்போது அர்த்தமற்றவையாகிவிட்டன.
2015 உலககிண்ணத்தின் மிகச்சிறந்த போட்டியில் விளையாடியது ஆறுதலாக உள்ளதா என்ற கேள்விக்கு ஏ.பி இல்லை, அப்படி நாங்கள்உணரவேயில்லை என்றார். நாங்கள் வெற்றிபெறுவதற்காகவே கிரிக்கெட் ஆடுகின்றோம். உலககிண்ண சம்பியன்கள் என்ற பெருமையை எங்கள் நாட்டிற்கு கொண்டுசெல்வது எங்கள் நோக்கம். நாங்கள் இன்று அதனை செய்யவில்லை. நாங்கள் அதனை சாதிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நீங்கள் சந்தித்ததோல்விகளில் இதுவே மோசமானதா என்ற கேள்விக்கு ஆம் என அவர் பதிலளித்தார். என்ன தவறு நடைபெற்றது என்பது குறித்து அவர்கள் உடனடியாக ஆராயமாட்டார்கள் அல்லது ஆராயாமலே விடலாம். இந்த அணியின் அனேகமான வீரர்கள் அடுத்த உலககிண்ணப்போட்டியிலும் விளையாடுவார்கள்.
ஆனால் வெற்றிக்கும் தோல்விக்குமான சிறிய இடைவெளியில் அவர்கள் இன்று தங்களை தொலைத்தனர். அணித்தலைவர் அணியை வழிநடத்திய விதம் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்,அவர் இந்த உலககிண்ணம் முழுவதும் அற்புதமாக தலைமைதாங்கினார். அவர் பேட்டிகளில், செய்தியாளர் மாநாடுகளில் தெரிவித்ததை செயற்படுத்திக்காட்டினார் என தெரிவித்த அணியின் பயிற்றுவிப்பாளர் ரசல்டொமிங்கோ, அணி விளையாடிய விதம் குறித்தும் அவர்கள் மைதானத்தில் தங்களை வெளிப்படுத்திய விதம் குறித்தும் நான் பெருமிதமடைகிறேன். இது கிரிக்கெட்டிற்கு அவர்கள் எவ்வளவு முக்கியத்துவத்தையளிக்கின்றனர் என்பதை உலககிண்ணத்தை வெல்வதற்கு அவர்கள் எவ்வளவு தூரம் முயன்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. அணியின் வீரர்களின் அர்ப்பணிப்பு குறித்து சிறிதளவும் எனக்கு சந்தேகமில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அணி வீரர்கள் இந்த தோல்வியால் உடைந்துபோய்விட்டனர் என்பதை டொமிங்கோ ஏற்றுக்கொண்டார். தோற்றது எங்களுக்கு மிகவும் கடினமான விடயமாகவுள்ளது என்றார் அவர்.
இதேவேளை டிவிலியர்ஸ் தான் தென்னாபிரிக்க மக்களின் இதயங்கள் எவ்வளவு தூரம் வேதனையால் துடித்திருக்கும் என்பதை தான் உணர்வதாக குறிப்பிட்டார்.




