செய்திகள்

கருணாநிதி ஒரு போராளி, மீண்டு வந்து என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே என பேசுவார்- குஷ்பு

வயது மூப்பு மற்றும் உடல்நல குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை கடந்த 27-ந் தேதி நள்ளிரவில் திடீரென்று மோசமானது. இதைத்தொடர்ந்து அவர் ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்ததை தொடர்ந்து அவரது ரத்த அழுத்தம் சீராகி உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இருந்தபோதிலும் அவர் தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளார்.

நேற்று இரவு திமுக தலைவர் கருணாநிதிக்கு திடீர் என்று உடலில் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது. மீண்டும் அவரது இரத்த அழுத்தம் அதிகமானது. இதைத்தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல் நிலை சீரானது. இந்த தகவல் கேட்டு மருத்துவமனை முன்பு ஏராளமான தொண்டர்கள் குவிந்து விட்டனர்

இதை தொடர்ந்து உடல்நிலையில் சிறு பின்னடைவு ஏற்பட்டு சீரானதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது.

நேற்று திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் 3-வது நாளாக தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது . மருத்துவமனை முன்பு ஏராளாமான தொண்டர்கள் நிரம்பி வழிந்தனர். தலைவா எழுந்து வா என்றும், கலைஞர் வாழ்க என்று கோஷம் எழுப்பியபடியே இருந்தனர்.

நேற்று காவேரி மருத்துவமனைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், சரத்பவார் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்களும், பிரபலங்களும் வருகை தந்து கருணாநிதி உடல் நலம் குறித்து விசாரித்தனர்.

மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான தொண்டர்கள் விடிய விடிய காத்து கிடக்கின்றனர்.திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று 4-வது நாளாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கருணாநிதியின் உடல்நிலை தொடர்ந்து சீராக உள்ளதாக மருத்துவமனை தகவல் வெளியிட்டு உள்ளது. இன்றும் மருத்துவமனை முன் தொண்டர்கள் திரண்டு நின்று தலைவா எழுந்து வா என்றும், கலைஞர் வாழ்க என்று கோஷம் எழுப்பியபடியே இருந்தனர்.

* இன்று காலை தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய மந்திரி ராசா ஆகியோர் வருகை தந்தனர்.

* கே.என்.நேரு, பொன்முடி ஆகியோர் காவேரி மருத்துவமனை வருகை தந்தனர்

* இன்று திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க காவேரி மருத்துவமனைக்கு நக்கீரன் ஆசிரியர் கோபால், நடிகர் நிழல்கள் ரவி வருகை தந்தனர்.

* திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரிக்க தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் காவேரி மருத்துவமனை வருகை தந்தார்.

* நடிகர் விஜயகுமார் காவேரி மருத்துவமனை வந்தார். அங்கு திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பற்றி விசாரித்த பின் நடிகர் விஜயகுமார் பேட்டி அளித்தார். அப்போது,

கருணாநிதி நூறாண்டுகாலம் வாழ்வார். அந்த மன உறுதி அவரிடம் இருக்கிறது. கருணாநிதி நல்ல உடல் நலத்துடன் இருப்பதாக ஸ்டாலினும், அழகிரியும் சொன்னார்கள். பொதுமக்களும், தொண்டர்களும் பயப்பட வேண்டாம் என கூறினார்.

* காவேரி மருத்துவமனையில் பிக்பாக்கெட் அடித்த 13 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

* திமுக தலைவர் கருணாநிதி குறித்து நலம் விசாரித்த பின் காங்கிரஸ் தேசிய செய்தி தொடர்பளர் குஷ்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கருணாநிதி என்றைக்குமே ஒரு போராளியாக இருந்திருக்கிறார். இன்றும் அவர் ஒரு போராளியாக இருக்கிறார். கருணாநிதி பூரண குணமடைந்து வீட்டுக்கு திரும்பி வருவார் என்ற நம்பிக்கை நம் எல்லோருக்கும் இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே என கோடிக்கணக்கான தொண்டர்களை பார்த்து பேசுவார் என்று நம்புகிறேன். காவேரி மருத்துவமனையின் மருத்துவர்கள் ரொம்ப நல்லபடியாக அவரை கவனித்து வருகிறார்கள். இவரைப் போன்ற தலைவர் நம் எல்லோருக்கும் தேவை என கூறினார்

* திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்தார்.

* திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மலேசிய நாடாளுமன்ற சபாநாயகர் விக்னேஸ்வரன் விசாரித்தார். பின்னர் அவர் திமுக தலைவர் கருணாநிதி விரைவில் பூரண குணமடைய மலேசிய மக்கள் சார்பில் பிரார்த்தனை செய்கிறேன் என்று கூறினார்.(15)