காணாமல் போனவர்களின் உறவினர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக கிளிநொச்சியில் கதவடைப்பு போராட்டம்
கிளிநொச்சியில் காணாமல் போன தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தி வலிந்து காணமால்போகச் செய்யப்பட்டோரின் உறவினர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து கிளிநொச்சியில் கதவடைப்புடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் இன்று மேற்கொள்ளப்படுகிறது.
காணாமல் போயுள்ள தமது உறவுகளை மீட்டுத்தருமாறு வலியுறுத்தியும் காணாமல் போகச் செய்யப்பட்டோர் குறித்து தீர்க்கமான முடிவொன்றை வழங்குமாறும் வலியுறுத்தி காணாமல் போனோரின் உறவினர்கள் இன்றும் உறுதியான கொள்கையுடன் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிளிநொச்சியில் உள்ள பொதுச்சந்தை வர்த்தகர்கள், இன்று கதவடைப்பில் ஈடுபட்டதுடன், கவனயீர்ப்பு ஊர்வலமொன்றையும் முன்னெடுத்துள்ளனர்.
கிளிநொச்சி பொதுச் சந்தைக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குறித்த போராட்டம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் நடைபெற்றுக்கொண்டிருக்கும், கந்தசுவாமி ஆலயம் வரை சென்றதுடன் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோருடன் வர்த்தகர்களும் இணைந்து ஆதரவளித்தனர்.
நல்லாட்சி அரசாங்கம் என்பது பெயரளவில் மாத்திரம் நல்லாட்சி என்ற பெயரில் இருக்காது, உறவுகளைத் தேடி அலையும் மக்களைத் தொடர்ந்தும் ஏமாற்றாது விரைவில் உரிய தீர்வை வழங்குமாறு கிளிநொச்சி சேவைச் சந்தை வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை உரிய தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ள காாணமற் பேனோர் சங்கத்தின் தலைவி நி.ஆனந்தலீலாவதி, தீர்வு வழங்கப்படாவிட்டால் போரட்ட வடிவத்தில் மாற்றம் எற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.





