செய்திகள்

காணாமல் போனவர்கள் தொடர்பில் நல்லாட்சி அரசு முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் பேசுவதற்கு மகிந்தவிற்கு அருகதை இல்லை

காணாமல்  போனவர்கள் தொடர்பில் நல்லாட்சி அரசு முன்னெடுக்கும் நடவடிக்கை தொடர்பில் பேசுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எந்தவொரு அருகதையும் இல்லை என தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் சக வாழ்வு  அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

கண்டி இந்து இளைஞர் மன்றத்தில் 08.08.2016 அன்று ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த மக்கள் சந்திப்புக்கான ஏற்பாடுகளை தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் ஏற்பாடு செய்திருந்தார்.

இதில் அமைச்சர் மனோ கணேசன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

காணாமல்  போனவர்களின் தொடர்பில் நல்லாட்சி அரசாங்கம் காரியாலயம் ஒன்றை அமைத்து தகவல் பெற்று வர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது. 1989ஆம் ஆண்டு முதல் நமது நாட்டில் தமிழர், சிங்களவர், மூஸ்லீம்கள் என பலரும் காணாமல்  போயுள்ளனர்.

ஆனால் காணாமல்  போனவர்கள் தொடர்பில் பேசுவதற்கு முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எந்தவொரு அருகதையும் இல்லை.

அரசாங்கம் இராணுவத்தினரை காட்டிக்கொடுக்க முற்படுவதாக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறி வருகின்றார். ஆனால் அக்காலப்பகுதியில் ஜெனிவா சென்ற இவர் தான் முதலில் நம் நாட்டு இராணுவத்தினரை காட்டி கொடுக்க புகார் தெரிவித்தவர். இவ் வசனத்தை வெளிப்படையாக சொல்ல வேண்டுமானால் இராணுவத்தினரை காட்டிக்கொடுத்தவர் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்த நாட்டில் தமிழர்கள், சிங்களவர்கள், மூஸ்லிம்கள் இனிமேலும் காணாமல் போக கூடாது என்பதில் மிக அவதானத்துடன் நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்களாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஒரு காலத்தில் மக்கள் தன் குறைகளை எடுத்துரைக்க முடியாத நிலை இருந்தது. மந்திரிகளையும், அமைச்சர்களையும் மக்கள் தேடி செல்லும் ஒரு நிலை இருந்தது. ஆனால் இந்த நிலை இப்பொழுது மாற்றம் பெற்றுள்ளது.

காரணம் நல்லாட்சி அரசாங்கத்தில் மந்திரிகளும், அமைச்சர்களும் மக்களை தேடி செல்கின்றார்கள். மலையகத்தை பொருத்த வரை தீர்க்கப்படாத ஏகப்பட்ட பிரச்சினைகள் இருக்கின்றது. இந்த மக்கள் சந்திப்பானது அவர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான தீர்வினை பெற்று தருவதற்கு சக்தியாக அமைந்துள்ளது.

இதன் முதல் கட்ட நடவடிக்கை நுவரெலியா மாவட்டத்தில் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கண்டியில் நடக்கும் இந்த மக்கள் சந்திப்பு மலையக பிரதேசங்கள் அனைத்திற்கும் கொண்டு செல்லப்படும். அமைச்சர் திகாம்பரத்தின் ஊடாக கொண்டு செல்லப்படுகின்ற இந்த மக்கள் சந்திப்பானது எதிர்வரும் காலங்களில் பதுளை, கேகாலை, இரத்தினபுரி, காலி, மாத்தறை என முன்னெடுத்து செல்லப்படும்.

இந்த நாட்டில் மலையக மக்கள் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு சுதந்திரம் இன்றி வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் நல்லாட்சி அரசாங்கம் இவர்களை மேலோங்க வைக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.340A4178 340A4191 340A4233 IMG_8620

n10