கிழக்கின் தமிழ்ப் பிரதேசங்களை மட்டும் வடக்குடன் இணைப்பதை அன்றே சிந்தித்த செல்வநாயகம்
சிவேந்திரனின் முகநூல் பதிவிலிருந்து
கொழும்பு அரசாங்கத்தில் அதிகாரப் பகிர்வை சிந்தித்துக்கொண்டிருந்த தமிழ் அரசியற் தலைமைகளின் இறுகிப்போன சிந்தனையிலிருந்து விலகி தமிழர்கள் தாயகத்தின் அடிப்படையிலான சமஷ்டி அடிப்படையிலான சிந்தனையை உருவாக்கிய முன்னோடி எஸ்.ஜே.வி.செல்வநாயகம்.
அவர் சிங்கள அரசுகளுடன் செய்துகொண்ட உடன்படிக்கைகள் கிழித்தெறியப்பட்டு அரசியல் யாப்பும் மாற்றப்பட்ட பின்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி வடக்குக்கிழக்கு தனி நாட்டுக்கோரிக்கையை முன்வைத்தது.
இங்குதான் அடிப்படையான சிக்கலை தமிழ்த் தலைமைகள் உருவாக்கிக்கொண்டன.கிழக்கு முஸ்லிம்களையும் இணைத்து தமிழ்பேசும் மக்கள் என்ற கற்பனை அரசியற் சமூகத்தை வெற்றிகரமாக உருவாக்கிவிடலாம் என்று அப்பாவித்தனமாக அவர்கள் நம்பினர்.தமிழர்களும் சோனகர்களும் நீரும் எண்ணையும் போன்று இருவேறு மனக்கட்டமைப்பைக்கொண்ட மக்கள் என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொள்ளாமல் இரண்டையும் தமிழ்பேசும் மக்கள் என்ற வாய்ப்பாடு மூலம் கலந்துவிடலாம் என்று கலக்கிப் பார்த்தனர்.கலக்கிமுடிந்த மறுகணமே அவை இருவேறு படைகளாகப் பிரிந்துநின்றன.
இந்தப் போலி உறவுக்கு கிழக்கு வாழ் தமிழர் கொடுத்த விலை வரலாற்றின் கொடிய பக்கங்களிலொன்று.
எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கிழக்கில் இரண்டு அல்லது இரண்டுக்கு மேற்பட்ட அலகுகள் உருவாக்கப்படவேண்டும் என்ற யதார்த்தத்தைப் புரிந்துகொண்டிருந்தார்.(இரண்டு எனில் ஒரு தமிழ்ப் பிரதேசம்,ஒரு முஸ்லிம் பிரதேசம்.அதற்கு மேற்பட்டதென்றால் குடியேற்றப்பட்ட சிங்களவர்களுக்குமான தனி அலகு)

அவற்றில் விரும்பிய அலகு வடக்குடன் இணைந்துகொள்ளலாம் என்ற உறுப்புரையையும் இணைத்து தமிழர்கள் இணைந்து வாழ்வதற்கான வழியை 1957 இல் உருவாக்கப்பட்ட பண்டா-செல்வா ஒப்பந்தத்தில் செய்திருந்தார்.
அதன் விபரம் பின்வருமாறு
01. பிராந்திய சபைகளின் எல்லைகள் – சட்டத்திலேயே அட்டவணையாகச் சேர்க்கப்பட்டு வரையறுக்கப்படவேண்டும்.
02. வடமாகாணம் ஒரு பிராந்திய சபையாகவும், கிழக்கு மாகாணம் இரண்டு அல்லது கூடிய பிராந்திய சபைகளாக அமையும்.
03. மாகாண எல்லைகளையும் தாண்டி 2 அல்லது மேற்பட்ட பிராந்திய சபைகள் இணைவதற்கு சட்டத்தில் ஏற்பாடு செய்யப்படும்; பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துக்கு அமைவாக, ஒரு பிராந்திய சபை தன்னைப் பிரித்துக் கொள்ளவும் இடமிருக்கும். 2 அல்லது மேற்பட்ட பிராந்திய சபைகளுக்கு பொதுவான குறிப்பிட்ட நோக்கங்களும், அவை சேர்ந்து செயல்பட சட்டத்தில் இடமிருக்கும்.
பண்டாரநாயக்க-செல்வநாயகம் உடன்படிக்கையின் 60 ஆண்டு நிறைவு இவ்வாண்டாகும்.
வடக்குடன் நேரடியாக கிழக்கின் தமிழ்ப் பிரதேசங்களை இணைத்து உடனடியாக ஒரு தமிழ் அலகை உருவாக்குவது கடினமாயின் செல்வ நாயகம் காட்டிய வழியில் கிழக்கில் தமிழர் பிரதேசங்களைத் தனி அலகாக உருவாக்குவதற்கும்,அதை வடக்குடன் இணைப்பதற்கான உறுப்புரையை இணைப்பதற்குமான வழிவகைகளை தமிழ் அரசியற்கட்சிகள் முன்னெடுக்கவேண்டும்.
தமிழ் பேசும் மக்கள் என்ற பாழுங்கிணறு எமக்குத் தேவை இல்லை.




