செய்திகள்

கூட்டமைப்பினர் ஜனாதிபதியை சந்தித்தனர்!

இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட சில பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவும் இதில் பங்கேற்றிருந்தார்.

வௌிவிவகார அமைச்சர் அலி சப்ரி, சட்டமா அதிபர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோரும் இந்த கலந்துரையாடலில் பங்கேற்றிருந்தனர்.

அரசியல் தீர்வு, காணாமல் ஆக்கப்பட்டோர், தொல்பொருள், காணிப் பிரச்சினை தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் தாம் பங்கேற்கவில்லை என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் கூறினார்.

ஏற்கனவே நடைபெற்ற கலந்துரையாடல்களில் முன்னேற்றம் ஏற்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, தமது அலுவலகத்திற்கும் அழைப்பு கிடைத்திருந்ததாகவும் கூட்டத்தில் கலந்துகொள்ளாதிருக்க தீர்மானித்ததாகவும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறினார்.

-(3)