சக்திமிக்க தேசிய அரசாங்கத்தை பொதுத் தேர்தலின் பின் உருவாக்குவோம்: ரணில் அறிவிப்பு
நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலுக்கு பின்னர் சக்தி மிக்க தேசிய அரசாங்கத்தை கட்டியெழுப்புவோம் என தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சிக்கான எமது அரசியல் பயணத்தில் இணைந்து கொள்ள விரும்பும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரி வித்தார்.
பொது தேர்தலை முன்னிட்டு ஐக்கிய தேசியக் கட்சிக்கு புதிய உறுப்பினர்களை இணைத்து கொள்ளும் ஆரம்பக்கட்ட நிகழ்வு நேற்று கொழும்பில் அமைந்துள்ள தொட்டலங்க தொடர் மாடி குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது இதில் கலந்து கொண்டு உறையாற்றுகையிலேயே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார். இதன் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது:
“கடந்த ஜனாதிபதி தோ்தல் பிரச்சார நடவடிக்கைகளின் போது அடுத்த பொது தோ்தலின் போது மக்களின் விருப்பத்திற்கு அமைய எம்முடைய அரசே ஆட்சியில் அமர்ந்திருக்கும் என நாம் கூறினோம் இதனை எந்த ஒரு தரப்பினரும் நம்பவில்லை இவ்வாறன நிலையில் பல்வேறு தியாகங்களின் மத்தியில் சர்வாதிகாரமிக்க ஒரு குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டில் நல்லாட்சிக்கு வித்திட்டோம்.
இவ்வாறான நிலையில் எமது நல்லாட்சியின் கீழ் மக்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதியின் அடிபடையில் எதிர்வரும் மாதம் பொது தோ்தல் ஒன்றுக்கு செல்ல உள்ளோம் எனவே பொது தோ்தலுக்கு பின்னரான எமது நல்லாட்சிக்கும் நாட்டின் எதிர் கால ஸ்திரமான பொருளாதார அபிவிருத்திக்குமான சக்தி மிக்க தேசிய அரசாங்கத்தை உருவாக்குவதோடு ஐக்கிய தேசி்யக் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர்களை பிரதிநிதுவப்படுத்தும் அங்கத்தவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிப்போம்.
எமது நல்லாட்சியின் கீழ் அடுத்த கட்ட செயற்பாட்டிற்கு அனைத்து கட்சிகள் உட்பட எமது மக்களும் உதவுவார்கள் என்பதில் எமக்கு எவ்வித அச்சமோ சந்தேகமோ இல்லை அனைத்து கட்சிகளும் இந்த சந்தர்ப்பத்தில் நாம் அழைப்பு விடுகின்றோம் வருபவர்களை இணைந்து கொள்வதற்கு நாம் எல்லா சந்தர்ப்பங்களிலும் தயாராகவே இருக்கின்றோம்.
இன்று எமது நாடானது நல்லாட்சியின் கீழ் மூவின மக்களும் எந்த ஒரு பிரச்சினைகளும் அன்றி வாழ்வதோடு பல்வேறு நாட்டின் தலைவர்கள் எமது நாட்டை நோக்கி பயணிக்கின்றனர் இந்த சந்தர்ப்பத்தை அனைவரும் பயன்படுத்தி கொள்ள வேண்டும் சர்வேத நாடுகளும் எமது நல்லாட்சியின் சில செயற்பாடுகளுக்கு பாராட்டுகளை தொிவிக்கின்றனர் எனவே நாம் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எமது நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும்” எனவும் ரணில் தெரிவித்தார்.




