சர்வதேச பங்கேற்பை அந்நிய தலையீடாக கருதக் கூடாது
– கலாநிதி ஜெகான் பெரேரா –
இலங்கையின் நிலைமாற்றுக்கால நீதிச் செயன்முறைகளில் சர்வதேச பங்கேற்பு தொடர்பான விவகாரம் தொடர்ந்தும் ஊகத்துக்குரியதொன்றாகவே இருந்து வருகிறது. அரசாங்கத்தரப்பில் வெவ்வேறு உறுப்பினர்கள் வெவ்வேறு கருத்துக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய கன்னிப் பேச்சின் விளைவாக உள்நாட்டுப் போரின் இறுதிக் கட்டத்தில் நடந்தவை பற்றிய உண்மையை உறுதிப்படுத்திக்கொள்வதில் சர்வதேச சமூகத்திற்கு பங்கொன்று இருக்கவேண்டுமென்ற கோரிக்கைக்கான ஆதரவு அதிகரித்திருக்கிறது.
ஒரு அரசு என்றவகையில் இலங்கையின் சுயாதிபத்தியம் மற்றும் ஐக்கியத்துக்காக பாடுபட்டவர் என்று பொன்சேகாவுக்கு இருக்கக்கூடிய சான்று ஆதாரங்களை அவரின் அரசியல் எதிரிகள் கூட நிராகரிக்க முடியாது. முன்னைய ஒரு காலகட்டத்தில் ஏற்பட்டிருந்த இராணுவத் தோல்விகளை மாற்றியமைத்து முன்னரங்கத்தில் நின்று தலைமை தாங்கியதன் மூலமாக இராணுவ வெற்றியைச் சாதித்துக்காட்டியவர் அவர். போரின் இறுதிக் கட்டத்தில் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டனவா என்பதைக் கண்டறிவதற்கான எந்தவொரு விசாரணையிலும் வெளிநாட்டு அவதானிகள் பங்கேற்பதற்கு அனுமதிக்கப்பட வேண்டுமென்று முன்னாள் இராணுவத்தளபதி பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
கடந்த அரசாங்க காலத்தில் இதன் தலைவர்களின் செயற்பாடுகளினால் முன்னாள் இராணுவத்தளபதி பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். அதிகாரம் மீதான தங்களின் ஏகபோகத்துக்கு ஒரு அச்சுறுத்தலாக வரக்கூடியவராக பொன்சேகாவை அந்தத்தலைவர்கள் நோக்கினார்கள். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முன்னாள் இராணுவத் தளபதிக்கு அரசியல் பழிவாங்கலுக்காக நிவாரணமளிக்கப்பட்டது. இராணுவத்தின் ஜெனரல் என்ற தரத்திலிருந்து பீல்ட் மார்ஷல் என்ற தரத்துக்கு அவர் பதவி உயர்த்தப்பட்டார். தேசிய ஐக்கிய அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு வழிவகுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு தேசியப்பட்டியலின் மூலமாக பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்ட அவருக்கு அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டது.
முன்னைய அரசாங்கத்தில் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரப்பொறுப்பில் இருந்தவர்கள் போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவ நடவடிக்கைக் கடமைப் பொறுப்புக்களில் இருந்து தன்னை விலகுமாறு கேட்டுக்கொண்டதுடன் இராணுவ நடவடிக்கைகளைக் கையாளும் பொறுப்பை அரசியல் அதிகாரப் பதவிகளில் இருந்தவர்களுக்கு கொடுத்தார்கள். சட்டங்களை எவராவது மீறினார்கள் என்றால் விசாரணைகள் நடத்தப்பட்டு அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று தனது கன்னிப்பேச்சில் பொன்சேகா கூறினார்.
போரின் முடிவுக்கட்டங்களில் குடிமக்கள் வகைதொகையின்றி கண்மூடித்தனமாகக் கொல்லப்பட்டதன் விளைவாக வும் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர்களும் அவர்களின் குடும்பத்தவர்களும் வேண்டுமென்றே கொல்லப்பட்டதன் விளைவாகவும் போர்க் குற்றங்கள் இழைக்கப்பட்டனவா என்பதைக் கண்டறிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென்று 2009 மே மாதத்திற்குப் பிறகு இலங்கை அரசாங்கம் மீது தீவிர நெருக்குதல்கள் பிரயோகிக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் சர்வதேச பங்கேற்புக்கு இணங்கிக் கொள்ளப்பட்டதற்குக் கடுமையான எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன.
தனது தலைமைத்துவத்தின் கீழ் இராணுவம் சர்வதேச சட்டங்களுக்கு இசைவான முறையிலேயே போரை முன்னெடுத்தது என்று பீல்ட் மார்ஷல் பொன்சேகா பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார். ஆனால் சர்வதேச சட்ட மீறல்கள் ஏதாவது இடம்பெற்றிருக்கின்றனவா? இல்லையா என்பதை அவதானிப்பதற்கு விசாரணைகளில் சர்வதேச அவதானிகள் பங்கேற்க அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். விசாரணையில் சர்வதேச அவதானிகள் பங்கேற்பது குறித்து பொன்சேகா பேசினாரே தவிர வெளிநாட்டு நீதிபதிகள் அல்லது வழக்குத் தொடுநர்கள் பங்கேற்பது குறித்து அவர் பேசவில்லை என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விடயமாகும். வெளிநாட்டு நீதிபதிகள், வெளிநாட்டு வழக்குத் தொடுநர்களின் பங்கேற்பு என்பது பெரும் சர்ச்சைக்குரிய விவகாரமாகும்.
புத்தகங்களில் வெளியான தகவல்கள்
இலங்கையின் சமாதான முயற்சிகளுக்கு ஆதரவளித்த வெளிநாடுகளின் தலைவர்களுடன் தொடர்புகொண்டு விபரங்களை அறிந்த பிறகு போரின் இறுதிக் கட்டங்கள் பற்றிய உண்மைகளை அதிலும் குறிப்பாக இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர்கள் சம்பந்தப்பட்ட ‘வெள்ளைக்கொடி’ விவகாரம் பற்றிய உண்மைகளை, வெளியிடப் போவதாகவும் பாராளுமன்றத்தில் பீல்ட்மார்ஷல் பொன்சேகா குறிப்பிட்டார். புத்தகம் ஒன்றை எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் சர்வதேச சமூகத்தின் சில பிரிவினருக்கு தெரிந்தவகையிலும் அடிக்கடி அவர்களின் கூட்டுப்பங்கேற்புடனும் இறுதிக்கட்டங்களில் போரை அரசாங்கம் எவ்வாறு நடத்தியது என்பது பற்றிய மேலும் கூடுதலான தகவல்கள் அந்தப் புத்தகத்தில் இருக்கும் என்றும் அவர் கூறினார். சிலவேளைகளில் வரலாற்றாசிரியர்களும் தங்களது தனிப்பட்ட அனுபவங்களைப் பற்றி எழுதுகின்றவர்களும் ஒரு நாட்டின் வரலாற்றின் பாதுகாவலர்களாக இருக்கிறார்கள் என்பதுடன் அவர்களது கருத்துக்கள், நிலைவரங்கள் பற்றி கூடுதலான அளவுக்கு முழுமையான பார்வையை தரக்கூடியனவாக அமையும்.
இத்தகையதொரு பின்புலத்திலே இம்மாத ஆரம்பத்தில் வெளியிடப்பட்ட புத்தகமொன்று கவனத்தை ஈர்த்திருக்கிறது. முன்னாள் இராணுவத்தளபதி பாராளுமன்றத்தில் நிகழ்த்திய கன்னிப்பேச்சின் மையப்பொருளாக அமைந்த ‘போரின் இறுதிக் கட்டங்கள்’ பற்றிய சர்வதேச நோக்கைத் தருவதாக அந்தப் புத்தகம் அமைந்திருக்கிறது. பி.பி.சி.யின் முன்னாள் செய்தியாளரும் பின்னர் சர்வதேச சமாதானச் செயன்முறைகளை ஊக்குவிக்கும் அமைப்பான சுவீடனைத் தளமாகக் கொண்ட ‘International IDEA’ வின் ஆராய்ச்சியாளராகப் பணியாற்றியவருமான மார்க் சோல்ரர் எழுதிய ‘To End a Civil War’ என்பதே அந்தப் புத்தகமாகும். 550 பக்கங்களைக் கொண்ட புத்தகம் இலங்கையின் இறுதியானதும் பெருமளவுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் அமைந்திருந்ததுமான சமாதான முயற்சிகளில் நோர்வே எவ்வாறு சம்பந்தப்பட்டது என்பதை மிகவும் உன்னிப்பான முறையில் தொகுத்துத் தந்திருக்கிறது. வெள்ளைக் கொடி விவகாரம் உட்பட போரின் இறுதிக் கட்டங்களில் இருந்து எழுந்த பிரச்சினைகளையும் அந்த புத்தகம் விளக்குகிறது. போரின் இறுதி நாட்களில் முன்னரங்கத்தில் நின்று செயற்பட்டவர்களினால் வழங்கப்பட்ட பெருவாரியான நேர்காணல்களும் அதில் அடங்கியிருக்கின்றன.
போர்க்காலகட்டத்திலும் போரின் முடிவுக்குப் பின்னர் நல்லிணக்கச் செயன்முறைகளுக்கு ஆதரவுத் தெரிவிப்பதற்காகவும் இருபது தடவைகளுக்கு மேல் இலங்கைக்கு விஜயம் செய்த ஜப்பானின் சமாதானத் தூதுவர் யசூசி அகாசி மார்க் சொல்ரரின் புத்தகம் பற்றித் தெரிவித்த கருத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார்:
எளிதில் கையாள முடியாத இந்த அனுபவங்களில் இருந்து நாமெல்லோரும் கற்கவேண்டிய அறிவுத் தெளிவுடைய பாடமென்னவென்றால் இந்த (சமாதான) முயற்சிகளின் இறுதிவிளைவு சமாதான செயற்பாட்டாளர்களின் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்ட அரசியல் சூழ்நிலைகளிலேயே தங்கியிருக்கிறது.
ஆனால், இலங்கையில் நோர்வேயின் சமாதான அனுசரணை முயற்சியின் தாக்கம் 2006 ஆம் ஆண்டில் போர் நிறுத்த உடன்படிக்கை வீழ்ச்சிகண்ட பின்னரும் நீடித்ததாக இருந்தது. நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சியை சர்வதேச சமூகத்தின் செல்வாக்கு மிக்க உறுப்பு நாடுகள் ஆதரித்தன. அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன இணைத் தலைமை நாடுகளாக இருந்தன. போர் நிறுத்த உடன்படிக்கைக் காலகட்டத்தின் போது முக்கியத்துவம் பெற்ற ஆக்கபூர்வமான சர்வதேச ஈடுபாட்டின் மரபுப் போர் முடிந்த பின்னரும் தொடர்ந்தது. இன்றும் கூட நீடித்து நிலைக்கிறது.
நிலைபேறான தாக்கம்
முதலில் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அழைப்பின் பேரில் 2000 ஆம் ஆண்டுக்கு முன்னரான காலகட்டத்தில் தொடங்கப்பட்ட நோர்வேயின் அனுசரணை முயற்சி இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட 2002 ஆம் ஆண்டில் அதன் உச்ச நிலையை அடைந்தது. அது பரஸ்பரம் ஏற்புடையதான தீர்வொன்றை எட்டுவதற்கான சிறந்தவாய்ப்பை நாட்டுக்குக் கொடுத்தது. 2002 பிற்பகுதியில் செய்யப்பட்ட ஒஸ்லோ பிரகடனம் அதன் உச்சநிலையாக அமைந்தது. அந்தப் பிரகடனத்தில் இன முரண்நிலைக்கான மூலவேர்க் காரணிகளை கையாளுவதற்கு, சமஷ்டித் தீர்வொன்றை ஆராய்வதற்கு அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் இணங்கிக் கொண்டனர். இன்றும் கூட நியாயமான அரசியல் தீர்வொன்றின் உருவரைபு அதிகாரப்பகிர்வின் சமஷ்டி ஏற்பாடுகளின் செயற்பாட்டு எல்லைகளுக்குள்ளேயே தங்கியிருக்கின்றது. அதில் பல்லின சமுதாயமொன்றில் நிரந்தர சிறுபான்மையினராக இருக்க விதிவசமாக்கப்பட்டவர்களின் நோக்கில் இருந்து பார்க்கும்போது ஒரு சமூகத்தின் சனத்தொகை மேலாண்மை பெரும்பான்மையினரின் நிரந்தர கொடுங்கோன்மையாக வந்து விடுவதில்லை.
இலங்கையின் நிலைமாற்றுக்கால நீதிச் செயன்முறைகளில் சர்வதேச பங்கேற்பு சம்பந்தப்பட்ட இன்றைய விவகாரம் இலங்கையில் நோர்வேயின் சமாதான ஈடுபாட்டின் விளைவுகளில் ஒன்றாகும். அதுவே தங்களது பிரச்சினைகளுக்கு நியாயமான அரசியல் தீர்வொன்று இருக்க முடியும் என்ற நம்பிக்கையை தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருக்கிறது. அரசாங்கத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதான முயற்சிகளின் போது சமஷ்டி அடிப்படையிலான அதிகாரப்பகிர்வு ஏற்பாடொன்று தொடர்பான ஒஸ்லோ பிரகடனத்தையடுத்து நியாயமான அரசியல் தீர்வொன்று தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான விசேட வாய்ப்பொன்று கிடைக்கப்பெற்றது.
நீண்டகாலப் போரினால் சலிப்படைந்த இலங்கை சனத்தொகையில் பெரும்பாலானவர்கள் சமஷ்டித் தீர்வொன்று போரை முடிவுக்குக் கொண்டுவருமானால், அத்தகைய தீர்வை ஏற்க தயாராயிருத்திருந்தார்கள் என்பது அபிப்பிராய வாக்கெடுப்புக்களின் மூலமாக உறுதிசெய்யப்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு இருந்த இராணுவ வல்லமை இலங்கை அரசுக்கு இருப்பதையொத்த பேரம் பேசும் சக்தியை தமிழ் அரசியல் சமுதாயத்துக்குக் கொடுத்தது. அதன் விளைவே ஒஸ்லோ உடன்படிக்கையாகும்.
ஆனால் விடுதலைப்புலிகள் அடைந்த இராணுவ ரீதியான தோல்வி அரசியல் அதிகாரத்தில் ஒரு சமச்சீரின்மையைக் கொண்டு வந்தது. அது சமஷ்டி நோக்கில் இருந்து பின்வாங்கலுக்கு வழிவகுத்தது மாத்திரமல்ல, அதிகாரப்பரவலாக்கத்தைப் பொறுத்தவரை அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தின் வாயிலாக வழங்கப்படுகின்றவற்றைக் காப்பாற்றுவதற்குக் கூட தற்காப்பு ரீதியாகப் போராட வேண்டியதொரு நிலையை உருவாக்கியிருக்கிறது. அரசியல் கட்டமைப்பு ஒன்று நடைமுறையில் இருக்கவேண்டியது அவசியம் என்பதே நோர்வேயின் அனுபவத்திலிருந்து பெறப்பட்ட படிப்பினைகளில் ஒன்றாகும். அரசியலைமைப்புச் சீர்திருத்தச் செயன்முறையின் ஊடாக இதைச் செய்வதற்கே அரசாங்கம் நாட்டம் கொண்டிருக்கிறது.
நாட்டின் சகல பகுதிகளிலும் இருந்து வந்த சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் கடந்தவாரம் நடத்தப்பட்ட சமாதான செயன்முறை தொடர்பான கலந்துரையாடலொன்றில் பிரச்சினைகள் குறித்து ஆழமாக ஆராய்வதற்காக பங்கேற்பாளர்கள் பல சிறிய குழுக்களாகப் பிரிக்கபட்டுள்ளனர். பிரதானமாக வடக்கு, கிழக்கில் இருந்து வந்த தமிழ் பேசும் குழுவினர் தற்போதைய நிலைமாற்றுக்கால நீதிச் செயன்முறைகள் வெற்றியளிக்குமா என்பதில் தனிப்பட்டமுறையில் சந்தேகங்களை வெளியிட்டனர். இது எதிர்பார்க்கப்பட வேண்டியதே. சீர்திருத்தம் மற்றும் நல்லிணக்கத்தை நோக்கிய முன்னைய முயற்சிகள் பயனற்றுப் போனதை அவர்கள் கண்டிருக்கிறார்கள். எண்ணிக்கையில் நிரந்தர சிறுபான்மையினர் என்ற வகையில் அவர்கள் தங்களது பேரம் பேசல் பலத்தில் இருக்கின்ற சமச்சீரின்மையைக் குறைக்கக்கூடிய வேறு காரணிகளை அவர்கள் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகும். சர்வதேச பங்கேற்புடன் சம்பந்தப்பட்ட விவகாரத்தை தேசிய சுயாதிபத்தியத்தை அரித்துச் செல்லக்கூடிய ஒரு அந்நியத் தலையீடாக நோக்கக்கூடாது; இது அந்நியத் தலையீடாக வந்து விடவும் கூடாது.
மாறாக, சர்வதேச பங்கேற்பு நிலைமாற்றுக்காலச் செயன்முறைகளில் தமிழ் அரசியல் சமுதாயத்தின் நம்பிக்கையை வலுப்படுத்துவதாக அமைய வேண்டும். சர்வதேச அவதானிகள் பற்றிய பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கருத்தை ஆக்கபூர்வமான முறையில் அணுகினால் ல் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் தமிழ்ச் சமுதாயத்திற்குள் கூடுதலான அளவுக்கு நம்பிக்கையுணர்வை ஏற்படுத்துவதற்கு பங்களிப்புச் செய்யக்கூடியதாக இருக்கும்.




