செய்திகள்

சாவித்திரி படம் முன்னால் அழுத நடிகை கீர்த்தி சுரேஷ்

மறைந்த பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும் தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் சாவித்திரியாக கீர்த்தி சுரேஷ், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மான் நடித்துள்ளனர். சமந்தாவும் முக்கிய கதாபாத்திரத்தில் வருகிறார். நாக் அஸ்வின் இயக்கி உள்ளார்.

இந்த படத்தில் சாவித்திரி பற்றிய முழு தகவல்களும் இருக்காது என்றும் அவரது வேடத்துக்கு கீர்த்தி சுரேஷ் பொருத்தமானவர் இல்லை என்றும் பழம்பெரும் நடிகை ஜமுனா எதிர்ப்பு தெரிவித்து பரபரப்பு ஏற்படுத்தினார். படக்குழுவினர் அதனை பொருட்படுத்தாமல் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.

கதாநாயகர்களுக்கு இணையாக சம்பாதித்து சென்னையில் நீச்சல் குளத்துடன் பங்களா வீடு கட்டி சொகுசாக வாழ்ந்த காட்சிகளிலும் இறுதியில் படம் தயாரித்து நஷ்டமாகி சொத்துக்களையெல்லாம் இழந்து வறுமையில் சிக்கி கோமா நிலையில் இறந்தது போன்ற காட்சிகளிலும் நடித்தபோது கீர்த்தி சுரேஷ் காட்சிகளோடு ஒன்றிப் போனதாக படக்குழுவினர் பாராட்டினர்.

கிளைமாக்ஸ் காட்சியில் நடித்தபோது கலங்கினார். படப்பிடிப்பை முடித்து விட்டு கடைசி நாளில் படக்குழுவினர் சாவித்திரியின் உருவப்படத்தை வைத்து விளக்கேற்றி கும்பிட்டனர். அப்போது சாவித்திரி படத்தை பார்த்து கீர்த்தி சுரேஷ் கண் கலங்கி அழுதார். இந்த படம் மே மாதம் முதல் வாரத்தில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.(15)1113