செய்திகள்

போலீஸ் டி.ஜி.பி.யிடம் பானுப்பிரியாவை கைது செய்ய மனு

 தமிழ் திரை உலகில் 1980 மற்றும் 90-களில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் பானுப்பிரியா. சத்ரியன், அழகன், பிரம்மா, தளபதி, பரதன், அமரன், வானமே எல்லை, உழவன், சத்ரபதி உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் திரைக்கு வந்த கடைக்குட்டி சிங்கம் படத்தில் கார்த்தியுடன் நடித்து இருந்தார்.

இந்த நிலையில் தனது வீட்டில் வேலை பார்த்த ஆந்திராவை சேர்ந்த 14 வயது சிறுமியை பானுப்பிரியா கொடுமைப்படுத்தியதாக புகார் கூறப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை மீட்டுள்ளனர். அந்த சிறுமி தனது நகை பணத்தை திருடிவிட்டதாக பானுப்பிரியா குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் பானுப்பிரியாவை கைது செய்யும்படி ஆந்திராவில் உள்ள குழந்தைகள் நல அமைப்பு தெலுங்கானா போலீஸ் டி.ஜி.பி.யிடம் மனு அளித்து உள்ளது. அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

“சென்னை தியாகராயநகர் விஜயராகவபுரம் சாலையில் வசிக்கும் நடிகை பானுப்பிரியா, கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்த சிறுமியை வேலைக்கு அமர்த்தி கொடுமைப்படுத்தியதாகவும், அவரது உறவினர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. குழந்தை தொழிலாளர் தடை சட்டத்துக்கு எதிராக பானுப்பிரியா செயல்பட்டு உள்ளார்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே பானுப்பிரியாவை உடனடியாக கைது செய்ய வேண்டும்.”இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.சென்னையில் உள்ள குழந்தைகள் நல அமைப்பினர் பானுப்பிரியாவிடம் நேரில் விசாரணை நடத்தி உள்ளனர்.(15)