சிறுவனைப் பகடைக்காயாக்கி நிதி சேகரித்த இரு பெண்கள் கைது (படங்கள்)
சிறுவன் ஒருவனுக்கு சிகிச்சையளிப்பதற்கென பொய் கூறி சட்ட விரோதமான முறையில் பொதுமக்களிடம் நிதி சேகரித்த பெண்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பெண்கள் இருவரும் 29.05.2015 அன்று பிற்பகல் அட்டன் நகரில் வைத்து அட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருநாகல் கல்கமுவ மீகெலாவ பிரதேசத்தை சேர்ந்த இரு பெண்களும், குறித்த சிறுவனின் படத்தில் சிறுவனின் முகத்தை காயமடைந்தது போல் மாற்றம் செய்து சிறுவன் தற்போது அநுராதபுரத்தில் உள்ள சிறுவன் நிலையத்தில் இருப்பதாகவும் அவனை குணப்படுத்த வேண்டும் என கூறி இவ்வாறு நிதியை சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளனர்.
இரு பெண்களில் ஒருவர் அட்டன் நகரில் நிதி சேகரிக்கும் போது அட்டன் நகரில் வர்த்தகர் ஒருவா் சந்தேகப்பட்டு அட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.
அதன்பின் குறித்த பெண்ணை கைது செய்து விசாரணை செய்யும் பொழுது மற்றொரு பெண் தப்பிச் செல்ல முற்பட்ட போது அட்டன் பஸ் நிலையத்தில் வைத்து அந்த பெண்ணையும் கைது செய்துள்ளனர்.
அநுராதாபுரம் ஞானகுலம பகுதியில் ஒரு விகாரையில் 1500 ரூபா பணம் கொடுத்து இவ்வாறு நிதியை சேகரிப்பதற்காக போலியான ஆதராங்களை தயாரித்ததாகவும் ஒரு நாளுக்கு 5000 ரூபா தொடக்கம் 10000 ரூபா வரை தாங்கள் பணம் சேகரிப்பதாகவும், தங்களுக்கு எந்தவிதமான தொழில்வாய்ப்பு இல்லையெனவும் குடும்ப கஷ்டத்துக்காகவே இவ்வாறு செயற்பட்டதாகவும், பல காலங்களாக இலங்கையில் உள்ள பிரதான நகரங்களுக்கு சென்று இவ்வாறு நிதி சேகரிப்பில் ஈடுப்பட்டு வந்ததாகவும் இவர்கள் பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து டிக்கட் புத்தகங்களையும், போலியான ஆவணங்கள் என்பனவற்றையும் பொலிஸார் இவர்களிடமிருந்து கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் விசாரணைகளின் பின் அட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரப்படுவதாகவும் அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறான நிதியை சேகரிப்பதற்கு முன் நகர சபை அனுமதியையும், பொலிஸாரின் அனுமதியையும் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
அட்டன் பொலிஸ் அத்தியட்சகர் சமான் யடவல தலைமையில் அட்டன் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தயால் டீகாவத்துர உள்ளிட்ட குழுவினர் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.















