“சிவாவின் நடனம்” என்ற பெயரில் இசை நடன களியாட்டம் நடைபெற தடை: பிரதி பொலிஸ் மா அதிபருக்கு மனோ பணிப்பு
கம்பஹா மாவட்டத்தில் “சிவாவின் நடனம்” என்ற பெயரில் சைவ சமயத்தின் தலைமைக்கடவுளாக கருதப்படும் சிவபெருமானின் பெயரையும், உருவப்படத்தையும் பயன்படுத்தி களியாட்ட இசை நிகழ்ச்சி நடத்தப்படுவதை உடன் தடுத்து நிறுத்தும்படி மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் கூறியுள்ளதாவது, அகில இலங்கை இந்து மாமன்றத்தில் இருந்தும், தேசிய தமிழ் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்தும் இது தொடர்பான கோரிக்கைகள் எனக்கு விடுக்கப்பட்டுள்ளன. இந்த பெயரையும், உருவப்படத்தையும் தவிர்த்துக்கொண்டு இத்தகைய இசை களியாட்ட நிகழ்வுகள் நடத்தப்படுவதில் ஆட்சேபனை இல்லை.
ஆனால், இந்த பெயரில், சிவபெருமானின் உருவப்படத்தை பயன்படுத்தி 19ம் திகதி கம்பஹா நகரில் நடைபெறவுள்ளதாக விளம்பரப்படுத்தப்பட்டுள்ள இந்நிகழ்வு நடைபெறாது. இந்நாட்டில் மத உணர்வுகளை சீண்ட எவருக்கும் இடம் கொடுக்க முடியாது. இது தொடருமானால், எதிர்காலத்தில் புத்தனின், அல்லாவின், இயேசுவின் நடனம் என்ற பெயர்களிலும் இசை களியாட்ட நிகழ்வுகள் நடைபெற்று அவை நாட்டின் இன, மதங்களுக்கு இடையிலான சகவாழ்வை சீர்குலைக்கலாம்.
இத்தகைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் இளம் கலைஞர்கள் இவை தொடர்பில் இனி எச்சரிக்கையுடனும், பொறுப்புடனும் நடந்துக்கொள்ள வேண்டும். அதிலும் தமிழ் இந்துக்களை எவரும் நாதியற்றவர்கள் என நினைத்துவிடக்கூடாது.
R-06




