சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதில் எந்த சவால்கள் வந்தாலும் அஞ்சப் போவதில்லை: மைத்திரி உறுதி
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதில் எந்த சவால்கள் வந்தாலும் நான் அஞ்சப் போவதில்லை. அதற்கான அடித்தளம் இன்று காலி மே தினத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
நேற்று காலியில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார். இங்கு தொடர்ந்தும் ஜனாதிபதி உரையாற்றுகையில் தெரிவித்தது:

“1956 களிலும் 1960 களிலும் வடக்கிலிருந்து சமஷ்டி வேண்டுமென்ற குரல் ஒலித்தது. அதேபோன்று 26 வருடகாலம் நாட்டில் பயங்கர யுத்தமும் நிலவியது. எனவே சமஷ்டி தேவை என்ற குரல் ஏன் வடக்கிலிருந்து ஒலித்தது. அதேபோன்று ஏன் 26 வருடகால யுத்தம் நாட்டில் ஏற்பட்டது? என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும். அது தொடர்பில் ஆராய வேண்டும்.
அத்தோடு ஒன்றுபட்ட இலங்கைக்குள் ஒற்றையாட்சிக்குள் நாம் தீர்வு காண வேண்டும். அதற்காக நாம் இன, மத, குல, அரசியல் பேதங்களுக்கு அப்பாற்பட்டு தேசிய நல்லிணக்கத்தை பலப்படுத்த வேண்டும்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் ஆரம்பகட்டமாக இலங்கையிலிருந்து கடலுணவுப் பொருட்களை ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்தது. அதேபோன்று ஆடை தொழிற்துறைக்கு வழங்கப்பட்டிருந்த ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையும் தடை செய்யப்பட்டது. இவையனைத்தும் இலங்கைக்கு எதிரான பொருளாதார தடையினை விதிப்பதற்கு முன்னேற்பாடுகளாக மேற்கொள்ளப்பட்டன.

ஆனால் இன்று எமது முயற்சியினால் ஐரோப்பிய ஒன்றியம் தனது தடையினை நீக்கியுள்ளது. இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவு 12.00 மணிக்கு (நேற்று) அரசாங்கத்தால் வெ ளியிடப்படவுள்ளது. அதேவேளை தடைவிதிக்கப்பட்ட ஜீ.எஸ்.்பி. வரிச்சலுகையும் இன்னும் இரண்டொரு வாரங்களில் மீண்டும் எமக்கு கிடைக்கவுள்ளது.
அத்தோடு உலக நாடுகள் பேதமில்லாமல் இன்று எமது அபிவிருத்திக்கு உதவி புரிய முன்வந்துள்ளன. இது எமது அரசாங்கத்திற்கு கிடைத்த வெற்றியாகும். இலங்கை வரலாற்றில் முதல் முறையாக ஜீ– 7 பொருளாதார மாநாட்டிற்கு கலந்து கொள்வதற்கான அழைப்பு இலங்கை ஜனாதிபதிக்கு விடுக்கப்பட்டிருந்தது. இது எமக்கு கிடைத்த நல்ல சந்தர்ப்பமாகும். இது எமது நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு மேலும் உதவிகள் கிடைக்கும் சந்தர்ப்பமாக அமையும்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதில் எந்த சவால்கள் வந்தாலும் நான் அஞ்சப் போவதில்லை. அதற்கான அடித்தளம் இன்று காலி மே தினத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த பொதுத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆட்சியை உருவாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்றார்.
R-06




