சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி என்னிடமிருந்து பறிக்கப்பட்டது: மகிந்த ஆதங்கம்
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவி தம்மிடமிருந்து பறிக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தான் அந்தப் பதவியைக் கொடுக்கவிரும்பவில்லை எனவும், அது பறிக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்திருக்கின்றார்.
2015ம் ஆண்டு வரையில் தாம் கட்சியின் தலைவராக கடமையாற்றியதாகவும் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவியதன் பின்னர், மைத்திரிபால சிறிசேன தமது பதவியை பறித்துக்கொண்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கட்சியின் தலைமைப் பொறுப்பினை தாம் மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியை சீர்குலைத்து வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
தாம் இரண்டு தடவைகள் தேர்தலில் தோல்வியடைந்துள்ளதாகவும் இதனால் கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து விலகுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம்மை வற்புறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத் தேர்தலில் சொந்தத் தொகுதியிலேயே தோல்வியைத் தழுவியிருந்தார் எனவும், தாம் ஒரு தடவையே தேர்தல் தோல்வியை எதிர்நோக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
-06




