சுமந்திரன் – பீரிஸ் சந்திப்பு சர்ச்சைகள் ஓர் அவதானம் !
யதீந்திரா
சில தினங்களுக்கு முன்னர் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும், அமைச்சர், பேராசிரியர் ஐp.எல்.பீரிசும் சந்தித்தித்துக் கொண்டது, தொடர்பில் பலவாறான அபிப்பிராயங்கள் உலவுகின்றன. இந்த சந்திப்பு இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்ளிஸின் முன்னிலையில், அவரது இல்லத்தில் இடம்பெற்றிருக்கின்றது. இந்த விடயம் தமிழ்ச் சூழலில் கூடுதல் கவனத்தை பெற்றிருக்கின்றது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக, அமெரிக்க தூதரக அதிகாரிகள் அனைவருமே வீடுகளில் இருந்தவாறே பணியாற்றி வருகின்றனர். எனவே குறித்த சந்திப்பு தூதுவரின் இல்லத்தில் இடம்பெற்றமையை கூடுதல் முக்கியத்துவம் கொண்டதல்ல.
குறித்த சந்திப்பு சில சலசலப்புக்களை ஏற்படுத்தியதை தொடர்ந்து, கூட்டமைப்பின் பங்காளித் தலைவர்களில் ஒருவரான செல்வம் அடைக்கலநாதன், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்திருக்கின்றார். அரசாங்கத்துடன் பேசுவதாயின் நிபந்தனையின் அடிப்படையில்தான் பேச வேண்டும். 13வது திருத்தச்சட்டத்தை ஒரு நிபந்தனையாக முன்வைக்கலாம் என்றும் அடைக்கலநாதன் குறிப்பிட்டிருக்கின்றார். அடைக்கலநாதன் பிறிதொரு விடயத்தையும் தனது செய்தியில் குறிப்பிட்டிருக்கின்றார். அதவாது, இந்திய அரசுடன் இணைந்து செயற்பட வேண்டும். ஆனால் சுமந்திரன் இது தொடர்பில், இதுவரையில் மேலதிக அபிப்பிராயங்கள் எதனையும் கூறவில்லை. முக்கியமாக சுமந்திரன் தொடர்புபடும் விடயங்களில் ஏனையவர்கள் சந்தேகங்களை வெளியிடுவதும், சர்ச்சைகளை ஏற்படுத்துவதும், தமிழ் அரசியல் சூழலை பொறுத்தவரையில் புதிய விடயமல்ல. இந்த விடயத்திலும் அதுதான் நடக்கின்றது.
இந்த சந்திப்பு தொடர்பில் பொதுவாக இருக்கும் ஒரு கேள்வி, இந்த சந்திப்பின் போது ஏன் அமெரிக்க தூதுவர் இருவருக்குமிடையில் இருந்தார்? இதில் அமெரிக்காவின் ஆர்வம் என்ன? பொதுவாகவே தமிழ் அரசியல் சூழலில் சதிக் கோட்பாடுகளின் மீதான கவர்ச்சி சற்று அதிகம். எல்லோருக்கும், எல்லாவற்றுக்கும் பின்னால் ஏதோ ஒரு மர்மம் இருப்பதாக கூறுவதை ரசிக்கும் அரசியல் போக்கொன்று, தமிழ் சூழலை நீண்டகலாமாகவே ஆக்கிரமித்திருக்கின்றது. அமெரிக்கா திருகோணமலையில் படைத்தளம் ஒன்றை நிறுவப் போவதாக கூறப்படும் கதைகளிலிருந்து, திருகோணமலையில் 3000 ஏக்கர் நிலத்தை அமெரிக்காவிற்கு கொடுக்கவுள்ளனர் என்று கூறப்படும் கதை வரையில், வதந்திகளோ ஏராளம்.
வேப்பை மரத்தில் பால் வடிகின்றது என்பதை நம்பும் படித்தவர்கள் இருக்கின்ற சமூகம் ஒன்றில், அமெரிக்க படைத்தள கதையை இந்த சமூகத்திற்குள் புகுத்துவது கடினமான காரியமல்ல. திருகோணமலையில் முச்சக்கர வண்டி ஓட்டுனர் ஒருவர் சாதாரணமாக கூறுகின்றார், திருகோணமலையை அமெரிக்காவிற்கு கொடுக்கப் போறாங்களாமே! இந்த அடிப்படையில்தான், பசில் ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை – அமெரிக்க தூதுவரின் முன்னிலையில் சுமந்திரன் – பீரிஸ் சந்திப்பு – சிங்கள இனவாத அமைப்பான குணதாச அமரசேகரவின் தேசப் பற்றுள்ள தேசிய இயக்கம் கூறித்திரியும், திருகோணமலை கதைகள், இப்படி அனைத்தையும் ஒன்றுபடுத்தி சிந்திக்க முற்படும் ஒரு சிலருக்கோ, மேற்படி சுமந்திரன் – பீரீஸ் சந்திப்பு பழம் நழுவி பாலில் விழுந்த கதையாகிவிட்டது.

அமெரிக்க தூதுவரின் முன்னிலையில் இந்த சந்திப்பு இடம்பெற்றமையால் இந்த விடயத்தில் நிதானமான பார்வை அவசியம் என்பதே இந்த கட்டுரையாளரின் அபிப்பிராயம். ஏனெனில் அமெரிக்காவின் ஆதரவு எப்போதுமே ஈழத் தமிழர்களுக்கு தேவை. அதே வேளை, தமிழர் பிரச்சினையை பொறுத்தவரையில் இந்தியாவே ஒரு நிர்ணயகரமான சக்தி. ஒரு வேளை தமிழர் விவகாரத்தில், அமெரிக்கா ஆர்வம் காண்பித்தாலும் கூட, நிச்சயம் அதற்கு பின்னால் இந்தியாவின் ஆலோசனைகள் இருக்கும். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் இந்தியா சில விடயங்களில் எட்ட நின்றாலும் கூட, இலங்கை விடயத்தில் இந்திய- அமெரிக்க கூட்டு தவிர்க்க முடியாத ஒன்றாகும்.
இதன் காரணமாகவே, இந்த கட்டுரையாளர் ஒரு விடயத்தை அவ்வப்போது வலியுறுத்தி வந்திருக்கின்றார். அதாவது, இந்திய மற்றும் அமெரிக்க ராஜதந்திரிகளை பொது வெளியில் எப்போதுமே தமிழர்கள் விமர்சிக்கக் கூடாது. ஏதேனும் அதிருப்திகள் இருந்தால் அதனை மூடிய அறைகளுக்குள் மட்டுமே கூற வேண்டும். ஏனெனில் பொது வெளியில் ராஜதந்திரிகளை விமர்சித்தால் அதன் பின்னர் அவர்களுடன்; சுமூகமான உறவுகளை ஏற்படுத்த முடியாமல் போய்விடும். சுமந்திரன் மீதுள்ள முரண்பாடுகளின் அடிப்படையில் ராஜதந்திர சமூகத்தின் தலையீடுகளை மதிப்பிடக் கூடாது. அதே வேளை தமிழர் தரப்பும் விடயங்களை நிதானத்துடனும் தூர நோக்குடனும் அணுக வேண்டும். அந்த பொறுப்பு சுமந்திரனுக்கும் உண்டு.
அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது பிரச்சினையான விடயமல்ல. அரசாங்கத்துடன்தான் பேச வேண்டும். ஆனால் எந்த அடிப்படையில் பேசுவது என்பதிலும், அதன் இறுதி விளைவு என்ன என்பதிலும் தெளிவான புரிதல் இருக்க வேண்டும். அதே வேளை பேச்சுவார்த்தை உத்தியோக பூர்வமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும். ஆனால் ஒரு கட்டம் வரைக்கும் சில விடயங்களில் இரகசியம் காப்பதிலும் தவறில்லை. ஏனெனில் இந்த விடயத்தில் தமிழர் தலைமைகளுக்கு நீண்ட அனுபவம் உண்டு. ராஜபக்சக்களை பொறுத்தவரையில் இருக்கின்ற மாகாண சபை முறைமையை கூட பலவீனப்படுத்த வேண்டும் என்பதில் குறியாக இருப்பவர்கள். இந்த நிலையில் எந்தவொரு தற்பாதுகாப்பு ஏற்பாடுகளுமின்றி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது ஒரு புத்திசாலித்தனமான அணுகுமுறையாக இருக்குமா?

ஒரு வேளை மூன்றாம்தரப்பு மத்தியஸ்துடன் ஒரு பேச்சுவார்த்தையை முன்னெடுக்க முடியுமாக இருந்தால் அது சிறப்பானது. ஆனால் இந்த அரசாங்கத்தை பொறுத்தவரையில் வெளியாரின் தலையீட்டை வேப்பங்காயாகவே கருதுகின்றது. இவ்வாறானதொரு சூழலில் கூட்டமைப்பு எவ்வாறானதொரு தற்பாதுகாப்பு ஏற்பாட்டின் அடிப்படையில் ராஜபக்சக்களோடு பேச்சுவார்தையில் ஈடுபட முடியும்? ஒரு தற்பாதுகாப்பு ஏற்பாடு இல்லாமல், பேச்சுவார்த்தைகளுக்கு செல்லும் போது, எப்போதுமே, தமிழர் தரப்பே, இலகுவில் பாதிக்கக் கூடிய தரப்பாக இருக்கும். அமெரிக்க பேராசிரியர் வில்லியம் சார்ட்மென்னின், ஆலோசனை இந்த இடத்தில் கருத்தில் கொள்ளத்தக்கது. அதாவது, ஒரு பலவீனமான தரப்பு, பலமான தரப்பு ஒன்றுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்ற போது, பலவீனமான தரப்பு, மூன்றாம் தரப்பு ஒன்றிடமிருந்து, அதிகாரத்தை கடன்பெற முடியும். இதன் மூலம் பலவீனமான தரப்பு, பேச்சுவார்த்தை மேசையில் பலமான தரப்பாக அமர முடியும். இந்த அடிப்படையில் சிந்தித்தால் அமெரிக்க தூதுவரின் முன்னிலையில் சுமந்திரன், பீரிசை சந்தித்தமை தவறான ஒரு விடயமல்ல. ஒரு வேளை சுமந்திரன் தனியாக பீரிசையோ அல்லது பசில் ராஜபக்சவையோ சந்தித்து பேசியிருந்தால் அது சிக்கலானது.
எனவே கூட்டமைப்பு சில முன்னெடுப்புக்களில் ஈடுபடுவதில் தவறில்லை. ஆனால் அதில் கூட்டு இணக்கப்பாடு அவசியம். சுமந்திரன் விடயங்களை கையாளுவதில் தவறில்லை. ஆனால் கூட்டமைப்புக்குள் அதிருப்திகள் ஏற்படாத வகையில், விடயங்கள் முகாமை செய்யப்பட வேண்டும். கடந்த காலத்தில் ஏற்பட்ட பல முரண்பாடுகளுக்கு இதுவே காரணம். கடந்த ஆட்சிக் காலத்திலும் பல்வேறு விடயங்களை சுமந்திரனே தனித்து மேற்கொண்டிருந்தார். ஆனால் அதில் சுமந்திரன் வெற்றிபெறவில்லை. இந்த அனுபவத்திலிருந்து சுமந்திரன் கற்றுக்கொள்ள வேண்டும்.
யுத்தம் நிறைவுற்று 12 வருடங்கள் சென்றுவிட்டது. இந்தக் காலத்தில், தாயகத்திலும் புலம்பெயர் சூழலிலும் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன் விளைவாக பல நிகழ்வுகள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றை முன்வைத்து ஏராளமான விவாதங்களும், கட்சி சண்டைகளும் இடம்பெற்றிருக்கின்றன. பல அணிகள் உருவாகியிருக்கின்றன. ஆனால் எல்லாவற்றுக்கு பின்னரும், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலமோ முள்ளில் அகப்பட்ட துணி போன்றுதான் காட்சியளிக்கின்றது. துணி கிழிந்து போவது பற்றி முட்களுக்கு எப்போதுமே கவலையிருக்கப் போவதில்லை. ஏனெனில் அது முட்களின் இயல்பு. துணியை பாதுகாக்க விரும்புவர்கள்தான், முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். துணி கிழிந்த பின்னர், முட்களை பழிப்பதால் பயனில்லை. இந்த எச்சரிக்கை உணர்வுடன்தான் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தலைவர்கள் என்போர் கையாள வேண்டும். இதில் அனைவருக்கும் பொறுப்புண்டு.

இலங்கையின் மீது சர்வதேச அழுத்தங்கள் இருக்கின்றது, அதனால் அரசாங்கம் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கின்றது – என்பது எந்தளவிற்கு உண்மையோ, அந்தளவிற்கு அவற்றுக்கு சில வரையறைகள் உண்டு என்பதும் உண்மையாகும். இதனை கடந்த 12 வருட கால அனுபவங்கள் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. இன்று உலகில் இயங்கும் எந்தவொரு சர்வதேச அமைப்பும் சர்வலோக நிவாரணியல்ல. அவைகளை நம்புவதை தவிர வேறு வழியில்லை என்பது எந்தளவிற்கு உண்மையோ, அந்தளவிற்கு அவற்றின் மூலம் எமக்கு தீர்வு கிடைக்கும் என்று காத்துக் கொண்டிருந்துவிட்டு, பின்னர் எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று கூறி, குற்றம்சாட்டுவதிலும் பயனில்லை என்பதையும் நாம் மறத்தலாகாது. சர்வதேச சூழலை, அமைப்புக்களை நோக்கி பணியாற்றிக் கொண்டிருக்கின்ற போதே, மறுபுறம் நமக்கான வாய்ப்புக்களை தேடு;ம் பயணத்தையும் நாம் தொடர்ந்து கொண்டுதான் இருக்க வேண்டும். அரசாங்கம் நெருக்கடியில் இருக்கின்ற போது, அது தமிழர்களை நோக்கி வர முற்பட்டால் அதனையும் கையாளத்தான் வேண்டும். அதில் தவறில்லை. ஏனெனில் எந்தவொரு விடயத்திலிருந்தும் தப்பி ஓடுவதால், அந்த விடயத்தை ஒரு போதுமே நாம் கையாள முடியாது.


