செய்திகள்

சென்னையில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பேருந்து இலவசம்

சென்னை மாநகரப் பேருந்துகளில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார். தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் செயல்படுத்திவிட்டதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையில் 110ஆம் எண் விதியின் கீழ் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டார்.

இதன்படி சென்னை மாநகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் செய்ய விரும்பும் முதியவர்கள் இதற்கான படிவத்தை பூர்த்தி செய்யது அளித்தால், மாதத்திற்கு 10 டோக்கன்கள் தரப்படும் எனவும் அதனை பயணச் சீட்டைப் போலப் பயன்படுத்தி அவர்கள் பயணம் செய்யலாம் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

குளிர்சாதனப் பேருந்துகளில் இந்தச் சலுகையைப் பயன்படுத்த முடியாது.

ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24ஆம் தேதியிலிருந்து இந்தத் திட்டம் அமலுக்குவருகிறது. கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து பிற இடங்களுக்கும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் என ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

மேலும், இந்த அறிவிப்பின் மூலம் 2011ஆம் ஆண்டில் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றியிருப்பதாக ஜெயலலிதா கூறியிருக்கிறார்.

n10