செய்திகள்

அரசியலிலிருந்து விலகி மனைவி மகனுடன் வாழப் போகிறேன் – பாலித்த தெவரப்பெரும

இந்த தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பொலிஸ் அதிகாரிகள் எனக்குத் தொல்லை கொடுத்து வருகின்றனர். இந்த தொல்லைகள் காரணமாக எனது மனைவியும் மகனும் கஷ்டங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நான் அரசியலில் ஈடுபட்டுள்ளதன் காரணமாகவே இந்த தொல்லைகள் கொடுக்கப்படுகின்றன.இதனால், எனது மனைவி, பிள்ளைகளின் பெறுமதியை நான் புரிந்து கொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிடுவதிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளேன். அத்துடன் அரசியலிலிருந்து விலகி, மனைவி, மகனுடன் வாழப் போகிறேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட வேட்பாளர் பாலித்த தெவரப்பெரும தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக உதவி தேர்தல் ஆணையாளரைச் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளேன். ஐக்கிய தேசியக் கட்சிக்கும் எனக்கும் எப்போதும் பிரச்சினை இருந்ததில்லை. சஜித் பிரேமதாசவின் செயற்பாடுகளுக்கு எதிராக இம்முறை தேர்தலில் களம் இறங்கினேன்.எனக்குக் கொடுக்கப்படும் இந்த தொல்லைகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியே காரணம் என நான் நினைக்கின்றேன். நேற்று காலை ஐக்கிய தேசியக் கட்சியின் சட்டத்துறை செயலாளரைச் சந்தித்து அதனடிப்படையில் இந்த தீர்மானத்தை எடுத்தேன்.ஐக்கிய தேசியக் கட்சி குறித்தே, ரணில் விக்ரம சிங்க மீதோ எனக்கு இருக்கும் அதிருப்தி காரணமாக இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை.

“உயிரிழந்து போன எனது மகனின் பெயரில் தானம் வழங்குவதற்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகை ஒன்றை அப்புறப்படுத்தச் சென்ற மத்துகமை பொலிஸார் சிலர், எனது மனைவியைத் தள்ளி விட்டதன் காரணமாக அவர் தற்போது நாகொடை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்ய வந்தேன் என நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)