செய்திகள்

இந்த வருடத்துக்குள் அரசியல் யாப்பு கொண்டுவரப்பட வேண்டும்

இந்த வருடத்துக்குள் அரசியல் யாப்பு கொண்டுவரப்பட வேண்டும் என்றும், இது தமிழ் மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில் அமையவேண்டும் என்பதே தமிழ்மக்களின் எதிர்பார்ப்பாகும் என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

அனைத்து சமயத் தலைவர்களின் தேசிய மாநாடு என்ற தொனிப்பொருளில் தேசிய சமாதானப் பேரவையின் மாநாடு நேற்று கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் உரையாற்றுகையிலேயே முன்னாள் ஜனாதிபதி இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் ,

கொண்டுவரப்படும் யாப்பு புதிய அரசியலமைப்பாக இருக்கலாம் அல்லது அரசியலமைப்பு திருத்தமாக இருக்கலாம் .

தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் பெரும்பாண்மை இன மக்களின் தலைவர்கள் மீது நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே தான் தமது உரிமைகள் அரசியலமைப்பின் ஊடாகவே உறுதிப்படுத்த வேண்டும் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

13ஆவது திருத்தம் அதிகாரப்பகிர்வுக்கு போதாதா என சிலர் கேட்கின்றனர். இது போதுமானதாக இல்லை என்பதனாலேயே கடந்த 30 வருடமாக யுத்தம் இடம்பெற்றது. இந்நிலையில் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தினால் போதாதா எனக் கேட்கின்றமை வேடிக்கையாக உள்ளது என்றார்.

நான் ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அரசியல் தீர்வை முன்னெடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டேன். எமது இந்த திட்டத்திற்கு பிரபாகரன்  விரும்பவில்லை. நான் முன்னெடுத்த இந்த அரசியல் திட்டம் தொடர்பில 7 மாத காலப்பகுதிக்குள் 33 சுற்று பேச்சுவார்தைகளே நடத்தியிருந்தேன். அன்று இதனை எதிர்த்தவர்கள் இன்று  எம்முடன் இணைந்துள்ளனர். எனவே சகல பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிறந்ததொரு காலம் ஏற்பட்டிருப்பதாகவே நான் கருதுகின்றேன் என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் உள்ளிட்ட பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.

n10