செய்திகள்

இரணைமடு குள புனரமைப்பில் மோசடி விரைவில் சட்ட நடவடிக்கை

கிளிநொச்சியில் கடந்த வருடம் டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை அடுத்து, இரணைமடுக் குளத்தின் புனரமைப்பின்போது மோசடி இடம்பெற்றதாக மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர்.இந்நிலையில் இரணைமடு குள புனரமைப்பின் போது இடம்பெற்ற மோசடியில், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.ஆசிய அபிவிருத்தி வங்கியின் 2,198 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இரணைமடுக் குளம் புனரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் ஆராய்வதற்காக வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன், மூவரடங்கிய குழு ஒன்றினை கடந்த ஜனவரி மாதம் 10ஆம் திகதி நியமித்தார். விசரணைக்குழுவின் முதலாவது அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதன் பிரகாரம், இரணைமடுக் குள புனரமைப்பின்போது மோசடி இடம்பெற்றதாக உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முதலாவது அறிக்கையின் பிரகாரம், மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்கு இரண்டாவது குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த குழுவின் அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் கிடைக்கப்பெறும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கூறினார்.இரண்டாம் அறிக்கை கிடைத்த பின்னர் குள புனரமைப்பின்போது இடம்பெற்ற தவறுகள் மற்றும் அதனை மேற்கொண்டவர்கள் குறித்தும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.(15)