செய்திகள்

இலங்கையில் பாரிய சர்வதேச கிரிக்கட் மைதானம் தற்பொழுது அவசியந்தானா – மஹேல ஜயவர்தன கேள்வி

இலங்கையில் பாரிய சர்வதேச கிரிக்கட் மைதானமொன்று தற்பொழுது அவசியந்தானா என தேசிய கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.ஹோமாகம பிரதேசத்தில் சர்வதேச அளவில் கிரிக்கட் போட்டிகளை நடாத்தக் கூடிய பாரிய மைதானமொன்றை அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்டது.அமைச்சர் பந்துல குணவர்தன உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மைதானம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள பகுதிக்கு நேற்று விஜயம் செய்து அந்தப் பகுதியை பார்வையிட்டிருந்தனர்.

இலங்கையின் மிகப் பெரிய சர்வதேச கிரிக்கட் மைதானமாக உருவாக்கப்பட உள்ளதாகவும் இது மூன்று ஆண்டுகளில் பூர்த்தியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.தற்பொழுது நாட்டில் காணப்படும் கிரிக்கட் மைதானங்களிலேயே போதியளவு சர்வதேச மற்றும் முதல்தர கிரிக்கட் போட்டிகளை நடாத்துவதில்லை என மஹேல ஜயவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.இவ்வாறான ஓர் பின்னணியில் புதிதாக பாரியளவிலான ஓர் சர்வதேச கிரிக்கட் மைதானத்தை நிர்மானிப்பது அவசியமா என கேள்வி எழுப்பியுள்ளார்.தனது அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவொன்றை இட்டதன் மூலம் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.(15)