செய்திகள்

ஐரோப்பிய யூனியனில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியது பிரிட்டன்

இங்கிலாந்து, கடந்த 2016-ம் ஆண்டு ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற முடிவு எடுத்தது. இது “பிரெக்ஸிட்” என்று அழைக்கப்படுகிறது. ஆனால் ‘பிரெக்ஸிட்’ அவ்வளவு எளிதாக அமையவில்லை. ‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் 2 பிரதமர்கள் ராஜினாமா செய்தார்கள். அதன் பிறகு பிரதமர் பதவிக்கு வந்த போரிஸ் ஜான்சன் ‘பிரெக்ஸிட்’டை நிறைவேற்ற தீவிர முனைப்பு காட்டினார். ஆனால் ஆரம்பத்தில் அவருக்கும் அது சாத்தியமாகவில்லை. ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை இல்லாததால் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு தேர்தலை அறிவித்தார்.

அந்த தேர்தலில் தனி பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெற்றார். அதன் பிறகு மேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தை தாக்கல் செய்து ஒப்புதலை பெற்றார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறியது.

இந்த நிலையில் பெல்ஜியம் தலைநகர் பிரசல்சில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் மீது ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. ஓட்டெடுப்புக்கு முன்னதாக மசோதா மீது உணர்ச்சிகரமான விவாதம் நடந்தது. இங்கிலாந்தை சேர்ந்த ஐரோப்பிய உறுப்பினர்கள் சிலர் கண் கலங்கியவாறு பேசினர்.

அப்போது, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறும் இங்கிலாந்துக்கு பல்வேறு உறுப்பினர்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர். அதே சமயம், இங்கிலாந்தின் எதிர்கால உறவுகள், வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தை ஆகியவை குறித்து சில உறுப்பினர்கள் எச்சரித்தனர். அதனை தொடர்ந்து, ஓட்டெடுப்பு நடந்தது. ஒப்பந்தத்துக்கு ஆதரவாக 621 உறுப்பினர்களும், எதிராக 49 உறுப்பினர்களும் வாக்களித்தனர். இதன் மூலம் நீண்ட இழுபறிக்கு பின் இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறியுள்ளது.

ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறிய பிறகு ஏற்படும் மாற்றங்கள்

* இங்கிலாந்து சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 73 பேர் தங்களது பதவியை இழப்பார்கள்.

* ஐரோப்பிய கூட்டமைப்பின் மாநாடுகளில் இங்கிலாந்து பிரதமர் மற்றும் மந்திரிகள் பங்கேற்க வேண்டிய கட்டாயம் இல்லை.

* பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குவதற்கும், விற்பனை செய்வதற்கும் புதிய விதிகளை அமைப்பது குறித்து உலகெங்கிலும் உள்ள நாடுகளுடன் இங்கிலாந்து பேச ஆரம்பிக்க முடியும்.

* இங்கிலாந்து பாஸ்போர்ட்டின் நிறம் மாற்றப்படும். 30 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த நீல நிறத்துக்கு இங்கிலாந்து பாஸ்போர்ட்டுகள் மாறும்.‘பிரெக்ஸிட்’ நினைவாக ‘ஜனவரி 31’ தேதியை தாங்கிய 50 பென்ஸ் நாணயங்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.46) இன்று புழக்கத்துக்கு வரும்.(15)