கன்னத்தில் அறைந்தது சர்வதேசம் அல்ல: ரணிலுக்கு பிரபா கணேசன் பதில்
வட மாகாணசபையில் கொண்டுவரப்பட்ட பிரேரணைக்கு சர்வதேசம் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கன்னத்தில் பதிலடி கொடுத்துள்ளதாக தெரிவித்திருக்கும் ரணில் விக்கிரமசிங்கவே தமிழ் மக்களின் கன்னத்தில் அறைந்திருக்கின்றார் என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவித்ததாவது,
பெரும்பான்மை பலமின்றி குறுக்கு வழியில் பிரதமர் பதவியை பெற்றுக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க தமிழ் மக்களுக்கு நண்பன் போன்ற நாடகத்தை பலவருடமாக தொடர்ச்சியாக நடத்தி வருகின்றார். இன்று இவர் வடமாகாணசபையில் கொண்டு வரப்பட்ட பிரேரணையை விமர்சித்து மறுபக்கம் தானே தமிழ் மக்களுக்கு அனைத்து தீர்வினையும் பெற்றுக் கொடுப்பேன் என்று கூறி தமிழ் கூட்டமைப்பினரிடமிருந்து தமிழ் மக்களை அந்நியப்படுத்தி ஐக்கிய தேசிய கட்சியை யாழ்.மாவட்டத்தில் நிலை நிறுத்தப் பார்க்கின்றார்.
லண்டன் மாநகரில் சம்பந்தன், சுமந்திரனது படங்கள் புலம் பெயர்ந்தவர்களால் எரிக்கப்பட்டுள்ளதை பார்க்கும் பொழுது இவ்விருவரும் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவது அம்பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் அறிக்கை வெளியிடப்படுமானால் அது சிங்கள மக்கள் மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு அமோக ஆதரவு கிடைத்து விடும் என்ற அரசியல் காரணத்திற்காக அறிக்கையினை ரணில் அரசாங்கம் தாமதப்படுத்தி வைத்துள்ளமை தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகம்.
இந்த துரோகத்திற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைமை துணை போகின்றது. கடந்த காலங்களில் கருணாவை விடு
தலைப் புலிகளிடமிருந்து பிரித்து ஆயுதப் போராட்டத்தை முடித்து வைத்த பெருமை ரணில் விக்கிரமசிங்கவையே சேரும். அதேபோல் இன்று வடமாகாணசபைக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும்
இடையில் பிரிவினையை ஏற்படுத்தி அதனை தென்னிலங்கைக்கு தெரிவித்து அடுத்த தேர்தலில் சிங்கள பெரும்பான்மை
வாக்குகளால் வெற்றி பெற முயற்சிக்கின்றார்.
ரணில் விக்கிரமசிங்கவின் உண்மையான முகத்தினை வெகு விரைவில் தமிழ் மக்கள் புரிந்து கொள்வார்கள். கடந்த ஜனாதிபதி தேர்தல் நேரத்தில் தமிழ் வர்த்தகர்களை சந்தித்த முன்னாள் ஜனாதிபதி தெரியாத தேவதையை விட தெரிந்த பிசாசான தனக்கு வாக்களிக்குமாறு கேட்டது இப்பொழுது எமக்கு ஞாபகம் வருகின்றது.