கிளிநொச்சியில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவரை முதலை இழுத்துச் சென்றது
கிளிநொச்சி முரசுமோட்டை ஊரியான் குளத்தில் மீன் பிடிக்கச் சென்றவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சடலமாக கண்டெடுக்கப்பட்டவர் ஊரியானையைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான சுப்பிரமணியம் நவநீதன் (வயது 40) என பொலிஸார் தெரிவித்தனர்.சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது இரண்டு மகன் மற்றும் தந்தை ஆகியோருடன் குறித்த குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற இவரை முதலை இழுத்துச் சென்றுள்ளது.இதனையடுத்து குறித்த பகுதிக்குச் சென்ற கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு கிளிநொச்சி பொலிஸார், இராணுவத்தினரின் மீட்புக் குழு, வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் அக்கிராம இளைஞர்கள் இணைந்து குளத்தில் தேடுதல் மேற்கொண்டனர். சுமார் இரண்டு மணி நேர தேடுதலின் பின்னர் குறித்த நபர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.(15)