செய்திகள்

சுகாதார அமைச்சின் புதிய வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறுவதால் ஆபத்துக்கள் உருவாகலாம் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை

தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறிய மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமனின் இறுதி சடங்கு ஏற்பாடுகள் குறித்தும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கவலையையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளது.மேலும் நிலைமையை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருக்காவிட்டால் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் கட்ட ஆபத்து உருவாகலாம் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.தற்போது நாட்டில் கடற்படையினருக்கும் வெளிநாடுகளில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்படுபவர்கள் மத்தியிலும் மாத்திரமே கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்படுவதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளபோதும் முக்கிய அமைச்சர்களின் இறுதிசடங்குகள் இடம்பெறும் பகுதிகளில் வழிகாட்டுதல்களை பின்பற்ற தவறுவதால் ஆபத்துக்கள் உருவாகலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.இறுதிசடங்கில் பெருமளவு மக்கள் கலந்துகொள்வதால் நாடு முழுவதுக்கும் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து பிராந்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.(15)