ஜனாதிபதி தேர்தலில் போலி வேட்பாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள்-தேர்தல் ஆணைக்குழு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போலி வேட்பாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.அத்துடன் எந்தவொரு வேட்பாளரும் போலி வேட்பாளர் என கண்டறியப்பட்டால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.போலி வேட்பாளர்கள் என கண்டறியப்பட்டால், வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் உடனடியாகவே இரத்து செய்யப்படும்” என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மேலும் ஏனைய வேட்பாளர்களின் வாக்குகளை கைப்பற்றுவதற்காக அல்லது வேட்பாளர்களுக்கு வழங்கப்படும் பரப்புரை நேரம் போன்ற வசதிகளை தவறாகப் பயன்படுத்துவதற்காக, மற்றொரு கட்சி அல்லது வேட்பாளரால் யாரேனும் ஒருவர் வேட்பாளராக களமிறக்கப்பட்டதாகக் கண்டறியப்பட்டால், அவரது பெயர் வாக்காளர்களின் முன்பாக அம்பலப்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.(15)