செய்திகள்

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்தும் வகையில் இன்று எழுக தமிழ் எழுச்சிப் பேரணி

தமிழர் தாயகத்தில் சிங்கள குடியேற்றங்களை நிறுத்து, போர்க்குற்றவாளிகளை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்து, எல்லா அரசியல் கைதிகளையும் விடுதலை செய், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக பக்கசார்பற்ற அனைத்துலக விசாரணையை நடத்து, தமிழ்ப் பகுதிகளில் இராணுவ மயமாக்கலை நிறுத்து, போரினால் இடம்பெயர்ந்த அனைவரையும் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்து ஆகிய ஆறு பிரதான கோரிக்கைகளை முன்வைத்து இன்று எழுக தமிழ் எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது. வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனை இணைத் தலைவராக கொண்ட, தமிழ் மக்கள் பேரவையினால், இந்த எழுக தமிழ் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றிலில் இருந்தும், யாழ். பல்கலைக்கழக வாயிலில் இருந்தும், இரண்டு இடங்களில் இருந்து ஆரம்பிக்கும் பேரணி யாழ். கோட்டை அருகேயுள்ள முற்றவெளி திடலில் முடிவடையும்.அங்கு எழுக தமிழ் பிரகடனம் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்படும். அத்துடன் பொதுஅமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரமுகர்கள் உரையாற்றவுள்ளனர்.மேலும் குறித்த . எழுக தமிழ் பேரணியில் 60 இற்கு மேற்பட்ட, அமைப்புகள் மற்றும் கட்சிகள் பங்கேற்கவுள்ளன. எழுக தமிழ் பேரணியில் பங்கேற்க, வவுனியா, அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு, மன்னார் ஆகிய இடங்களில் இருந்து பொதுமக்களை ஏற்றி வருவதற்காக 35 இற்கும் அதிகமான பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.