தீமீநுண்மிச்சுரம் தந்த சமூக அசபை
மருத்துவர் சி. யமுனாநந்தா
உயிர்களை இறைவன் உடலிலும், கடலிலும், காட்டிலும், மலையிலும் தோன்றக் காரணமாக இருந்து அது அளவில் பெருகாது இருக்கவும் செய்தான் எனத் திருமந்திரப்பாடல் விளக்குகின்றது.
‘அங்கி மீகாமை வைத்தான் உலகு ஏழையும்
எங்கும் மீகாமை வைத்தான் உடல் வைத்தான்
தங்கி மீகாமை வைத்தான் தமிழ்சாத்திரம்
பொங்கி மீகாமை வைத்தான் பொருள் தானுமே’. (திருமந்திரம் 187)
இன்று உலகைக் காவுகொள்ளும் தீமீநுண்மிச்சுரம் அவ்வாறே இறைவன் தந்த ஜீவதண்டனை ஆகும். சமூகச் சேய்மைப்படுத்தலும், சமூக முடக்கமும் சமூக அசைபையை ஏற்படுத்தி உள்ளது. முகக்கவசம் உயிர்க்கவசம் அதுவே சமூகக்கவசம் என முகத்திரைத் தொடர்பாடல் சமூக இயல்பாக மாறிவிட்டது. சும்மா இருத்தல் சுகம் என்பதனை, தீமீநுண்மிச்சுரம் கற்றுத் தந்து உள்ளது.
‘வெறுக்கும் தகைமைகள் செய்யினும் தம் அடியாரை மிக்கோர்
பொறுக்கும் தகைமை புதியதன்றே புதுநஞ்சு உண்டு
கறுக்கும் திருமிடற்றான் இடப்பாகம் கலந்த பொன்னே
மறுக்கும் தகைமைகள் செய்யினும் யானுன்னை வாழ்த்துவதோ’
அபிராமி அந்தாதி – 41
புதுநஞ்சு உண்டு கறுக்கும் திருமிடறு போன்றதே தற்போதைய தீமீநுண்மிச்சுர அறிகுறிகளும் தொண்டையில் தாக்குகின்றன. அதனைத் தடுக்க ஆலகாலவிடத்தை தடுத்து அருளிய அம்பிகையை இன்று நாமும் வணங்கி அருளைப் பெறும்நிலை ஏற்பட்டுள்ளது. நயினை நாகபூசணியின் தெப்போற்சவக்காட்சி ஆலகாலவிடத்தைக் காத்த அம்மையே எம்மைக் காக்கின்றாள் என தீமீநுண்மிச்சுரம் தந்த சமூக அசபை உணர வைத்துள்ளது.
தீமீநுண்மியினால் கூட்டான சமூக உளமாற்றத்தில் முரண்நிலை மிகுதல் மிகுதியாகக் காணப்படுகின்றது. சமூக, நிர்வாக மட்டத்தில் முரண்நிலை அதிகரித்துள்ளது. உலகளாவியரீதியில் நாடுகளுக்கிடையே முரண்நிலை யுத்தநிலைக்கு அதிகரித்துள்ளது. இலங்கையிலும் இனங்களுக்கு இடையிலான முரண்நிலையும், கட்சிகளுக்கு இடையிலான முரண்நிலையும் உட்கட்சிகளுக்குள்ளேயான முரண்நிலையும் வெகுவாக அதிகரித்துவிட்டது. பாடசாலை மாணவர்களின் கற்றல் பின்னடைவு, பாடசாலை விலகல் அதிகரித்துள்ளது. சிறுவர் தொழிலாளர்கள் அதிகரித்து உள்ளது. இளவயதுக் கர்ப்பம் அதிகரித்துள்ளது. போதைப்பொருள் பாவனையும் அதிகரித்துள்ளது. சமூகத்தில் சமூக முடக்கம், நோய் தொடர்பான பயப்பீதியையும், மனச்சோர்வு, சமூகத்தில் இருந்து ஒதுங்கல் மற்றும் விலகல் நடத்தைகள் அதிகரித்து உள்ளது.
தீமீநுண்மித் தாக்கத்தின் சமூக உளப் பாதிப்புக்களைச் சீர்செய்ய வேண்டிய பொறுப்பும் எமக்கு உள்ளது. இதனை நாம் பூகோளப் பேரிடராகக் கருதவேண்டும். பூகோளமயமாதலில் தளர்தலை தீமீநுண்மி ஏற்படுத்தி உள்ளது. தகவல் தொடர்பாடலில் மிகைத்தல் ஏற்பட்டு உள்ளது. பொருளாதார விருத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இவற்றில் இருந்து மீள்வதற்கு நன்கு திட்டமிட்ட மீள் எழுச்சித் திட்டங்கள் வகுக்கப்படல் வேண்டும்.
புத்தாயிரம் ஆண்டு பேண்தகு அபிவிருத்தியில் ஏகநலம் என்பதில் தொற்றுநோய்கள், தொற்றா நோய்கள், சனத்தொகைப் பெருக்கம், காலநிலை மாற்றம், சுற்றாடல் பாதுகாப்பு என்பவற்றை ஒன்றிணைத்த செயற்றிட்டமாக முன்னெடுத்தலின் அவசியத்தை தீமீநுண்மித்தாக்கத்தின் சமூக அசபை எமக்கு உணர்த்தி உள்ளது.