செய்திகள்

நிறுத்தப்பட்டிருந்த கிரிக்கெட் போட்டிகள் இன்று முதல் ஆரம்பம் : ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் முதல் போட்டி

உலகம் பூராகவும் நிலவும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளன.
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கை நேரப்படிஇன்று பிற்பகல் 3 மணிக்கு சவுதம்டனில் ஆரம்பமாகவுள்ளது.
3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது.
இங்கிலாந்தில் கொரோனாவுக்கு 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். கொரோனாவின் வீரியம் இன்னும் கட்டுக்குள் வராத நிலையிலும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் துணிச்சலுடன் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. அதனால் இந்த தொடர் உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
கொரோனாவின் பரவலால் தடைப்பட்டிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இந்த தொடரின் மூலம் 117 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயிர்ப்பித்துள்ளது. 2-வது உலக போருக்கு பின்னர் அதாவது 1946-ம் ஆண்டுக்கு பிறகு அதிக நாட்கள் கிரிக்கெட் போட்டி நடைபெறாத காலக்கட்டமாக இது அமைந்துள்ளது.
இரண்டு வாரம் தனிமைப்படுத்தப்படும் நடைமுறை, பல கட்ட கொரோனா பரிசோதனை என்று மருத்துவ பாதுகாப்பு வளையத்தில் வைக்கப்பட்டு உள்ள இரு அணி வீரர்களும் தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டுள்ளனர். களத்தில் தொடுதலை தவிர்ப்பது, சமூக இடைவெளி, அடிக்கடி கைகளை சானிடைசரால் கழுவுவது, உடலோடு உரசி கொண்டாடுவதை தவிர்ப்பது என்று வீரர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி ரசிகர்களுக்கும் அனுமதி இல்லை.
இதனால் வெறிச்சோடிய மைதானத்தில் வித்தியாசமான சூழலில் வீரர்கள் விளையாடப்போகிறார்கள். அது மட்டுமின்றி கொரோனா பரவும் அபாயம் இருப்பதாக கூறி பந்தை எச்சிலால் தேய்த்து பளபளப்பாக்க ஐ.சி.சி. தற்காலிகமாக தடை விதித்து இருக்கிறது. பந்தை ஒரு பக்கம் தொடர்ந்து பளபளப்பாக வைத்திருக்காவிட்டால் ‘ஸ்விங்’ செய்வது கடினம். இது பந்து வீச்சாளர்களுக்கு பாதகமாக இருக்கலாம். எச்சிலுக்கு தடை எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப்போகிறது என்பதும் உன்னிப்பாக கவனிக்கப்படும். -(3)