செய்திகள்

நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகார மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது

முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தை சுவீகரித்து அங்கு பௌத்த விகாரை அமைத்து குடிகொண்டுள்ள பௌத்த துறவியான கொலம்ப மேதாலங்க தேரர் பாரிய புத்தர் சிலை ஒன்றை நிறுவி முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தார்.இந்நிலையில் பிள்ளையார் ஆலயத்தில் கடந்த ஜனவரி மாதம் 14ஆம் திகதி வழிபாடுகளுக்குச் சென்ற மக்களோடு கொலம்ப மேதாலங்க தேரர் உள்ளிட்ட தரப்பினர் முரண்பட்டுள்ளனர்.இதனையடுத்து குறித்த இடத்திலேயே அமைதிக்கு பங்கம் ஏற்பட்டதாக தெரிவித்து முல்லைத்தீவு பொலிஸாரால் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் குறித்த பகுதி தொல்பொருள் திணைக்களத்துக்கு உரியது என பௌத்த துறவிகள் சார்பாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில், குறித்த பிரதேசம் தொல்பொருள் திணைக்களத்துக்கு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படவில்லை என்றும் குறித்த பகுதி பிரதேச செயலாளரின் ஆளுகையிலேயே உள்ளது என்றும் பிரதேச செயலகத்தால் குறித்த இடம் ஆலயத்துக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் ஆலய நிர்வாகம் சார்பாக முன்னிலையான சடடத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

கடந்த மாதம் ஆறாம் திகதி இடம்பெற்ற விசாரணைகளின்போது, அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த நீதவான், இரண்டு தரப்பினரும் எந்தவித மத வழிபாடுகளுக்கும் இடையூறு இல்லாமல் வழிபாடுகளை மேற்கொள்ளுமாறும் அதை மீறுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக பௌத்த மதகுரு மற்றும் பௌத்த மதகுரு சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் உள்ளிட்டோரால் வவுனியா மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக பௌத்த மதகுருவினால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.இந்த மனு மீதான விசாரணைகள் இன்று புதன்கிழமை வவுனியா மேல் நீதிமன்றத்தில் இடம்பெறவுள்ளன.(15)