செய்திகள்

பிள்ளையானின் விளக்கமறியல் நீடிப்பு

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை குற்றச்சாட்டின் பேரில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதான கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திகாந்தன் உட்பட நான்கு பேரின் விளக்கமறியல் தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளது.2015ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11ம் திகதி கொழும்பிலுள்ள குற்றப்புலனாய்வு துறை தலைமையகத்திற்கு விசாரனைக்காக அழைக்கப்பட்டு இவர் கைது செய்யப்பட்டிருந்தார். பின்னர் நீதி உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இன்று திங்கட்கிழமை மீண்டும் மட்டக்களப்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்பட்ட வேளை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.கணேசராஜா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிப்பதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

இக் கொலை தொடர்புடைய ஏனைய சந்தேக நபர்களான அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் முன்னாள் தேசிய அமைப்பாளரான எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா ( பிரதீப் மாஸ்டர் ) முன்னாள் உறுப்பினர்களான ரெங்கசாமி கனகநாயகம் ( கஜன் மாமா ) மற்றும் இராணுவ புலனாய்வில் பணியாற்றிய எம். கலீல் ஆகியோர் மீதான விளக்கமறியலும் அதே நாள் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

2005ம் ஆண்டு டிசம்பர் 25ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்திற்குள் வைத்து நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது ஜோசப் பரராஜசிங்கம் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவத்தில் அவரது மனைவி உட்பட சிலர் காயமடைந்திருந்தனர்.

1 2