செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் நாடு பல உயிரிழப்புக்களை சந்தித்து இருந்ததுடன், இந்த சம்பவம் நாட்டை மட்டுமன்றி உலகநாடுகளிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.மேலும், முன்னைய அரசாங்கத்தின் கவனயீனமே நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமைந்ததாக பெரும்பாலானோரினால் குற்றம் சுமத்தப்பட்டது.குறித்த தாக்குதல் தொடர்பாக முன்கூட்டியே சர்வதேச புலனாய்வு அமைப்புகளினால், தகவல் வழங்கப்பட்டபோது, அதற்கு பொறுப்பானவர்கள் அதனை கவனத்தில் கொள்ளவில்லை எனவும் கடந்த அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இதேவேளை கடந்த அரசாங்கத்தில் பாதுகாப்பு தொடர்பான முக்கிய அதிகாரங்கள் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்தது. இந்நிலையில் அவரும் பொறுப்புடன் செயற்படாமையே இன்று பல குழந்தைகள் தங்களது குடும்பத்தை இழந்து துன்பத்தில் வாழ்ந்து வருவதாக அரசியல் அவதானிகளினால் தொடர்ந்து சுட்டிதக்காட்டப்பட்டு வருகின்றது.இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக சாட்சியமொன்றை பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதேவேளை ரணில் விக்ரமசிங்கவும் சாட்சியமொன்றை வழங்குவதற்காக, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முன்னிலையாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.(15)