செய்திகள்

யாழ்.எய்ட் மனித நேய உதவி அமைப்பினர் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சமைத்த உணவுப் பொதிகளை கையளித்தனர்

நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கின்ற நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நோயாளர்கள் நெருக்கடிகளைச் சந்தித்துள்ளனர்.யாழிற்கு வெளியிலிருந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள பெருமளவிலான நோயாளர்களுக்கு வைத்தியசாலை நிர்வாகம் உணவினை வழங்கிய போதும் அவர்களுக்கு உதவியாளர்களாக நிற்பவர்கள் பெரும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் யாழ்.எய்ட் மனித நேய உதவி அமைப்பினர் சமைத்த உணவுப் பொதிகளை நேற்று இரவுவேளை ஊரடங்குக்கு மத்தியில் ஊடகவியலாளர்கள் சகிதம் எடுத்துச் சென்று வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளித்துள்ளனர்.இன்றும் மதியம் மற்றும் இரவு உணவுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் அவர்களால் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் யாழ்.எய்ட் மனித நேய உதவி அமைப்பினரின் குறித்த பணியை பலரும் பாராட்டி உள்ளனர்.(15)