செய்திகள்

யாழ்.சிறுப்பிட்டியில் வீட்டில் தனித்திருந்த சிறுமியைத் துஷபிரயோகம் செய்த இளைஞனுக்கு விளக்க மறியல்

யாழ்.சிறுப்பிட்டிப் பகுதியில் வீட்டில் தனித்திருந்த சிறுமியைத் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுக் கைதான சந்தேகநபரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் பெண்கள், சிறுவர் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை(19.04.2015) உத்தரவிட்டார்.

கடந்த சனிக்கிழமை வீட்டில் யாருமில்லாத சமயம் வீட்டில் தனித்திருந்த சிறுமியை இளைஞரொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தினார்.இது குறித்துச் சிறுமியின் பெற்றோர் அச்சுவேலிப் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் அப்பகுதியைச் சேர்ந்த 22 வயதான இளைஞர் ஒருவரைக் கைது செய்து பொலிஸார் விசாரணை நடாத்தினர்.

குறித்த இளைஞரை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை சட்ட வைத்திய அதிகாரியிடம் அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திய பொலிஸார் அதே தினத்தில் சிறுவர் பெண்கள் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதன் போதே குறித்த இளைஞரை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.  9யாழ்.நகர் நிருபர்).