செய்திகள்

லண்டனில் நடைபெற்ற “யாழ்ப்பாணக் கல்லூரியை பாதுகாப்போம்” ஆர்ப்பாட்டம்

தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண பேராயரும் அவரின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் யாழ்ப்பாணக்கல்லூரியின் நிர்வாகக் குழுவும் பல சிறப்புக்கள் கொண்ட யாழ்ப்பாண கல்லூரியை முறைகேடாக நடத்தி வீழ்ச்சி பாதையில் கொண்டுசெல்வதாக கண்டித்து கல்லூரியின் பழைய மாணவர்களும் நலன்விரும்பிகளும் நேற்று ஞாயிற்றுக்கிழமை லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியிருக்கின்றனர்.

Northolt Village Community Centre, Ealing Road, Northolt UB5 6AD என்ற இடத்தில் மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கல்லூரி நிர்வாகத்துக்கு எதிராக கோஷங்களை எழுப்பியதுடன் பல சுலோக அட்டைகளையும் தாங்கி இருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் அதன் ஒழுங்கமைப்பாளர்கள் அறிக்கை ஒன்றை முன்னதாக வெளியிட்டிருந்தனர். இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

இலங்கையில் 20ம் நூற்றாண்டின் தலைசிறந்த கல்விக்கூடங்களில் யாழ்ப்பாணக்கல்லூரியும் ஒன்று என்று சொன்னால் அது மிகையாகாது. அது மாத்திரமன்றி, யாழ்ப்பாணத்தில் நீண்டகால பாரம்பரியத்துடன் இயங்கிவரும் இரண்டு முற்று முழுதான தனியார் பாடசாலைகளில் யாழ்ப்பாணக் கல்லூரி ஒன்று.

இவ்வாறான சிறப்புக்களை கொண்ட கல்லூரி, கடந்த சில வருடங்களாக ஒரு வீழ்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது இதற்கான காரணம் தற்போதைய தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண பேராயரும் அவரின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் யாழ்ப்பாணக்கல்லூரியின் நிர்வாகக் குழுவும் என்பது பலரின் அபிப்பிராயம்.

அமெரிக்காவில் உள்ள யாழ்ப்பாணக்கல்லூரியின் நிதி அறங்காவலர்கள் ((Trustee of Jaffna College Funds in the USA)) மேற்கூறிய நிலையை மாற்றுவதற்காக, யாழ்பாண கல்லூரியின் இயக்குணர் சபையிலும், யாழ்ப்பாண கல்லூரியிலும் ஒரு மாற்றத்துடன் கூடிய சீர்திருத்தத்தை கொண்டு வருமாறு வலியுறுத்தியுள்ளாரகள். இதற்கு இசைய மறுக்கும் பட்சத்தில் அமெரிக்காவில் இருந்துவரும் நிதி உதவி 2019 ஆம் ஆண்டிலிருந்து முழுமையாக நிறுத்தி வைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்கள். இவ்வாறான நிலையிலும் தற்போது நிர்வாகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்கள் எதற்கும் உடன்பட மறுப்பது மிகவும் கவலைக்கிடமானது

யாழ்ப்பாணக்கல்லூரியின் வட்டுக்கோட்டை மற்றும் கொழும்பு பழைய மாணவர் சங்கங்கள் கல்லூரியின் தற்போதைய கவலைக்கிடமான நிலையை உலகிற்கு வெளிப்படுத்தவும், மாற்றத்தையும் சீர்திருத்தத்தையும் கோரி நிற்கும் அமெரிக்காவில் உள்ள அறங்காவலர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையிலும் கவனயீர்ப்பு ஆர்பாட்டங்களை நடாத்தியுள்ளார்கள்.

யாழ்ப்பாணக்கல்லூரியின் பிரித்தானியாவில் வாழும் பழைய மாணவர்களாகிய நாம் யாழ்ப்பாணக்கல்லூரியின் நலன் விரும்பிகளுடன் இணைந்து கல்லூரியின் தற்போதய நிலையை உலகிற்கு வெளிப்படுத்தவும், அமெரிக்காவிலுள்ள அறங்காவலர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும் ஒரு ஆர்ப்பாட்டத்தை நடாத்தவுள்ளோம்.

save jaffna college (2) save jaffna college (3)