செய்திகள்

வடக்கில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காக 850 தமிழ் பொலிஸார் புதிதாக சேவையில் இணைக்க முடிவு

வடக்கு மாகாணத்தில் புதிதாக 850 தமிழ் பொலிஸார்கள் இணைக்கப்படவுள்ளனர். இதற்காக 18 வயதிலிருந்து 28 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குலம் உயரமுடைய இளைஞர், யுவதிகள் முன்வரவேண்டும். இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 30 இலட்சமாகும். இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெறுமனே 85 ஆயிரம் பொலிஸாரும், 10 ஆயிரம் விசேட அதிரடிப் படையினரும் உள்ளனர்.இதனால் மேலதிக பொலிஸார் எமக்குத் தேவையாக உள்ளார்கள். வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுடன் இணைந்து பொலிஸ்மா அதிபரை நான் சந்திக்கவுள்ளேன் என வடக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் நேற்று மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அவர் தெரிவிக்கையில் வடக்கில் குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்காக, 850 தமிழ் பொலிஸார் புதிதாக சேவையில் இணைக்கப்படவுள்ளனர். இதற்காக தமிழ் இளைஞர்கள் யுவதிகள் முன்வந்து பொலிஸில் இணைய வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார்.(15)