செய்திகள்

வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் தவிர்க்க முடியாத சூழல் ஏற்படுவதைத் தடுக்க முடியாது : சம்பந்தன்

தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாவிட்டால் தவிர்க்க முடியாத சூழல் ஏற்படுவதைத் தடுக்க முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
மறைந்த சபாநாயகரும், அமைச்சருமான எச்.எம்.மொஹமட்டின் அனுதாபப் பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனைக் கூறினார். தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என எச்.எம்.மொஹமட் தீவிரமாக நம்பியிருந்ததுடன், சகல இனங்களும் ஒன்றிணைக்கப்பட்டு நியாயமான தீர்வொன்று கொண்டுவரப்பட வேண்டும் என அவர் விரும்பியிருந்தார்.
எனினும், அன்று அவருடன் நெருக்கமாகவிருந்த பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாது, நேர்மையாக நடந்துகொள்ளாது தீர்வொன்றை வழங்காது அவருடைய எதிர்பார்ப்புக்களை உடைத்திருந்தனர் எனவும் சுட்டிக்காட்டினார். இவ்வாறான நிலையில் தேசிய பிரச்சினைக்குத் தீர்வு காண்பது கடினம் என்பதை பின்னாளில் அவர் கூறியிருந்தார்.
இது கவலைக்குரிய விடயம். இந்த நிலைமை இன்னமும் தொடர்கிறது என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார். கடந்த ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் தேசிய பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் உறுதிமொழிகள் வழங்கப்பட்டன. இந்த உறுதிமொழிகள் நேர்மையாக நிறைவேற்றப்படாத நிலைமையே காணப்படுகிறது. இது எதிர்பார்க்காத நிலைமைகளை நாட்டில் ஏற்படுத்தும் எனவும் கூறினார். -(3)