தடைகளை கடந்து விஜயின் மெர்சல் வெளியானது ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளியையட்டி இன்று (புதன்கிழமை) உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் வெளிவருகிறது. இந்த படம் வெளிவருவதற்கு விலங்குகள் நலவாரியத்திடம் அனுமதி பெறவில்லை என்ற சர்ச்சை இருந்து வந்த நிலையில், கேளிக்கை வரி காரணமாக மெர்சல் படம் தீபாவளி பண்டிகையான இன்று வெளிவருவதில் சிக்கல் இருந்து வந்தது.
இந்த நிலையில் கேளிக்கை வரியை 8 சதவீதமாக தமிழக அரசு குறைத்தது. இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நடிகர் விஜய் கடந்த 15&ந் தேதி, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அதைத் தொடர்ந்து, மெர்சல் படத்துக்கு விலங்குகள் நல வாரியமும் அனுமதி அளித்தது. எனவே மெர்சல் படம் வெளியாவதற்கு இருந்த தடை நீங்கியது. நடிகர் விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளிவருவதற்கு முதல்&அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உதவியதாக தெரிகிறது.
மெர்சல் திரைப்படம் இன்று வெளியாக உள்ள நிலையில், அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இல்லத்தில், அவரை மீண்டும் நடிகர் விஜய் நேற்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். பல்வேறு சிக்கல்களைத் தாண்டி மெர்சல் திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துள்ளனர்.
விஜய் ரசிகர்கள் விடிய விடிய காத்திருந்து இன்று காலை முதல் காட்சி பார்த்தனர். காலை 7 மணி முதல், காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. இதனால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் கொண்டாடினர்.(15)




