தண்ணீர்ப் போத்தலுடனேயே மெய்ப்பாதுகாவலர் மைத்திரியின் கூட்டத்துக்கு சென்றார்: விசாரணையில் நாமல்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்ற அங்குனுகொலபெலஸ்ஸ கூட்டத்துக்குத் தனது மெய்பாதுகாவலர் தண்ணீர் போத்தலுடனேயே சென்றார் என நிதி மோசடி விசாரணைப் பிரிவுப் பொலிஸாருக்குத் தான் தெரிவித்தார் என ஊடகங்களுக்கு நாமல் ராஜபக்ஷ எம்.பி. கூறினார்.
நேற்று வெள்ளிக்கிழமை காலை 8.45 மணி தொடக்கம் மதியம் 1.45 மணி வரை சுமார் ஐந்து மணித்தியாலங்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவிடம் நிதி மோசடி விசாரணைப் பொலிஸார் விசாரணைகள நடத்தினர்.
நாமலின் மெயப்பாதுகாவலர் ஒருவர் அங்குனுபெலஸ்ஸவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருக்கமாக துப்பாக்கியுடன் சென்றிருந்தார். இது குறித்து நிதி மோசடிப் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை நடத்தினர் என நாமல் எம்.பி. தெரிவித்தார். இதற்குப் பதிலளித்த நாமல் எம்.பி. அக்கூட்டத்தில் எனது மெயப்பாதுகாவலர் தண்ணீர் போத்தலுடனேயே சென்றிருந்தார் எனத் தெரிவித்தார்.
மேலும் திஸ்ஸமஹராமையவில் தென் மாகாண சபை உறுப்பினர் டி.வி.உபுல் பேசுகையில் ” மஹிந்த ராஜபக்ஷ பிரதமரானதும் நிதி மோசடி விசாரணைப் பிரிவு பொலிஸாரைக் கல்லெறிந்து கொல்வோம்.” எனக் கூறியிருந்தார். இதன்போது நாமல் ராஜபக்ஷவும் அங்கு இருந்தார். இந்த விடயம் குறித்தும் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக நாமல் கூறினார்.




