தனுஷ் – ஐஸ்வர்யா விவாகரத்து!
நடிகர் தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் தமது திருமண வாழ்வை முடித்துக்கொண்டு விவாகரத்துக்கு தீர்மானித்துள்ளனர்.
தனுஷ் – ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2004-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.
திடீர் பிரிவு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
‘கடந்த 18 ஆண்டுகள் நண்பர்களாகவும், தம்பதியராகவும், பெற்றோர்களாகவும் ஒருவர் மீது ஒருவர் நல்லெண்ணம் கொண்டவர்களாகவும் ஒன்றாக பயணித்தோம். எங்களது வாழ்க்கை பயணம், வளர்ச்சி, புரிந்துகொள்ளுதல், அனுசரித்து செல்லுதல் ஆகியவை நிரம்பியதாக இருந்தது.
தற்போது நானும், ஐஸ்வர்யாவும் அவரவர் பாதையில் தனித்தனியாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளோம்.
நாங்கள் தனியாக இருப்பது நல்லது என்று நினைத்து இந்த முடிவுக்கு வந்துள்ளோம். எங்களது இந்த முடிவை எங்களது தனிமைக்கு மதிப்பு கொடுத்து மதிக்கும்படி அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். ஓம் நமச்சிவாயா- அன்பை பரப்புங்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் போன்றே ஐஸ்வர்யாவும் பிரிவை உறுதிப்படுத்தி தனியாக டுவிட்டரில் பதிவு வெளியிட்டுள்ளார். இது தமிழக திரை துறையினர், ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
தனுஷ்-ஐஸ்வர்யா இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டதாக இதுவரை தகவல்கள் வெளியானதில்லை. அப்படி இருக்கும் போது அவர்கள் திடீரென பிரிவதற்கு காரணம் என்ன? என்ற கேள்வி அனைவரது மனதிலும் எழுந்துள்ளது.
ஐஸ்வர்யா புதிய படம் ஒன்றை இயக்குவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தனுஷ்-ஐஸ்வர்யா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் அவர்களது பிரிவுக்கு இது காரணம் இல்லை என்றும் சொல்கிறார்கள்.
தனுஷ் சமீபகாலமாக இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த “அட்ராங்கி ரே” இந்தி படம் வெளியானது. இந்த படம் தமிழில் “கலாட்டா கல்யாணம்” என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
இன்னும் இந்தி படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்தி பட உலகில் அவருக்கு நெருங்கிய நட்பு வட்டாரம் உள்ளது. இந்தி படங்களில் நடிப்பது தொடர்பாக அவர் ஐஸ்வர்யாவுடன் எதுவும் கலந்து ஆலோசிப்பது இல்லை. தன்னிச்சையாகவே முடிவு எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இது அவர்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது.
இந்தி படங்களில் நடித்த பிறகு அவர் குடும்பத்தின் மீது நெருக்கம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் நடிகர் தனுஷ் மீது சமீபகாலமாக ஐஸ்வர்யா கடும் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. தனுஷ் நடித்த படங்களில் கதாநாயகிகளுடன் அவர் நெருங்கி பழகியதை ஐஸ்வர்யா விரும்பவில்லை என்றும் அதனால் தான் இந்த பிரிவு ஏற்பட்டு இருப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.
“மில்க்” நடிகை ஒருவருடன் தனுஷ் நெருக்கமாக இருந்ததாக சினிமா துறையில் கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அந்த நடிகையின் வீட்டிலேயே அவர் எப்போதும் இருப்பதாகவும் கூறப்பட்டது.
இதுபற்றி ஐஸ்வர்யாவுக்கு தெரிய வந்ததும் அவர் தனுசை கண்டித்ததாக தெரிகிறது. ஆனாலும் தனுஷ் அதை கேட்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.
மேலும் தெலுங்கு நடிகை ஒருவரிடமும் தனுஷ் நெருக்கம் காட்டி வந்தார். அதனாலும் அவரது குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தனுஷ் நடித்து வரும் படத்தில் அவருக்கு ஜோடியாக கேரள நடிகை ஒருவர் நடித்துள்ளார். அவருடன் நெருக்கமாக இருப்பதாகவும் கிசுகிசு பரவியது.
இந்த நிலையில் அந்த நடிகை ஐஸ்வர்யாவை சந்தித்து தனுஷ் தனக்கு தொல்லை கொடுப்பதாக புகார் செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக தனுஷ்- ஐஸ்வர்யா இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டதாக தகவல் சொல்லப்படுகிறது. அவர்கள் நிரந்தரமாக பிரிவதற்கு இதுவே காரணம் என்றும் கோடம்பாக்கம் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
-(3)




