தமிழ்த் தேசத்தின் இறைமை மீதான கேள்வி
நடப்பது என்னவோ உள்ளூராட்சி சபைத் தேர்தல்தான்.
ஆனால், தமிழர் தரப்பில் சர்ச்சைக்குரிய விடயமாகியிருப்பது தேசிய மட்டப் பிரச்சினையான, புதிய அரசமைப்புக்கான இடைக்கால அறிக்கை பற்றிய விவகாரம் என்பதுதான் நிலைமை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை குறிப்பாக சம் பந்தன், சுமந்திரன் போன்றோர் இடைக்கால அறிக்கையில் தங்கி, விடயங்களை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துவது பற்றிப் பேசுகின்றனர்.
ஆனால், வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக் னேஸ்வரனிலிருந்து, அவரது இணைத் தலைமையின் கீழ் இயங்கும் தமிழ் மக்கள் பேரவை, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சுரேஷ் பிறேமச்சந்திரனின் ஈ.பி.ஆர்.எல்.எவ். போன்ற தரப்புகள் வரை இடைக்கால அறிக் கையை நிராகரித்துக் கருத்து வெளியிட்டு வருகின்றன.
ஆக, இந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர் தரப்பில் பிரதான பேசு பொருளாக இடைக்கால அறிக்கையே மாறியிருக்கின்றது.
இன்னும் கொஞ்சம் ஆழமாக நோக்கினால், தமிழர் தரப்பில் இடைக்கால அறிக்கை தொடர்பான கருத்துக் கணிப்பாக இந்தத் தேர்தல் மாறியிருக்கின்றமையும் கூடக் கண்கூடு.
இத்தகைய இடைக்கால அறிக்கை மீதான தரப்புகளின் வாதம் அல்லது விவாதம் இன்னும் தர்க்க ரீதியானதாக, நிபு ணத்துவ ரீதியானதாக, அறிவு சார்ந்ததாக மாறாமல், வெறும் உணர்ச்சியூட்டுவனவாகவே இருப்பது மிகவும் கவலைக்குரியது.
‘ஏகிய ராஜ்ய’ என்ற சிங்களச் சொல் வழமையாக ஒற் றையாட்சியைக் குறிப்பது என்பதுதான் உண்மை. ஆனால் இடைக்கால அறிக்கையில் அந்தச் சொல் பயன்படுத்தப்படும் இடத்திலேயே அடைப்புக் குறிக்குள் அதன் விளக்கம் (‘பிரிக்கப்படாத மற்றும் பிரிக்கப்பட முடியாத நாடு’ எனும் பொருளாகும் என்று) தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
உத்தேச ஏற்பாடுகளின் படி, புதிய அரசமைப்பில் முதலாம், இரண்டாம் உறுப்புரைகளில் இந்த ‘ஏகிய ராஜ்ய’ என்ற சொல் வரும் இடத்தில் அதன் பொருள் இன்னதுதான் என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் என்று கூறப்படுகின்றது.
அத்தகைய சூழலில் அந்த சொல் ஒற்றையாட்சியையே அங்கு குறிக்கும் என்று வாதிடுவது இடைக்கால அறிக்கையில் அதே உறுப்புரைக்குரிய விளக்கத்தில் ஆங்கிலப் பதமான ஷீஐஷ்மிழி௸தீ றீமிழிமிக்ஷூ (சமஷ்டி அரசு) இலங்கைக்குப் பொருத்தமற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ள சூழ்நிலையிலும், அப்படி வாதிடுவது பொருத்தமற்றதாகவே நமக்குப்படுகின்றது. ஆனால் இந்த இடைக்கால அறிக்கையில் இவற்றுக்கு அப்பாலும், சில சர்ச்சை கள் உள்ளன. அவற்றைச் சுட்டிக்காட்டி சுமந்திரனிடம் விளக்கம் கோருவது பொருத்தமானதுதான் எனக் கருதுகிறோம்.
தற்போதைய அரசமைப்பில் 3 ஆம் உறுப்புரிமையின்படி ‘நாட்டின் இறைமை மக்களுக்குரியது. பாரதீனப்படுத்த முடியாதது’ என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், இடைக்கால அறிக்கையின் முதல் உறுப்புரையே ‘இலங்கையின் இறைமை மக்களுக்குரியதாக இருப்பதோடு பாரதீனப்படுத்த முடியாததாகவும், பிரிக்கப்பட முடியாததாகவும் இருக்க வேண்டும்’ என்று கூறுகின்றது.
ஆக, இப்போதுதான் முதல் தடவையாக இந்த இடைக்கால அறிக்கை மூலம், இலங்கையில் ‘பிரிக்கப்பட முடியாத இறைமை’ இருப்பது குறித்து வலியுறுத்தப்படுகின்றது.
இது, இலங்கைத் தீவில் தமிழருக்குத் தனித்துவமான இறைமை இறையாண்மை உள்ளது என இவ்வளவு கால மும் நாம் வலியுறுத்திப் போராடும் விடயத்தை அடியோடு மறுத் துரைக்கும் ஏற்பாடல்லவா?
இதனை ஏற்றால், இலங்கைத் தீவில் தமிழர் தேசம், தமிழர் தாயகம், அந்தத் தாயகத்துக்குத் தனியான இறையாண்மை என்பவை ஏதும் இல்லை என்றாகி விடாதா?
சமஷ்டியோ, சுயாட்சியோ, உள்ளக சுயநிர்ணய உரிமையோ எதுவென்றாலும் இந்தத் தீவின் பூர்வீகமான தமிழர்களுக்குத் தனித்துவமான இறையாண்மை இங்கு உள்ளது என்ற அடிப்படை யிலிருந்துதானே உருவாகின்றது? அந்தத் தனித்துவ மான இறையாண்மை தமிழருக்கு இல்லை என்றால், சமஷ்டிக் கோரிக்கைக்கும், சுயநிர்ணய வலியுறுத்தலுக்கும், சுயாட்சி வற்புறுத்தலுக்கும் அடிப்படை ஏது? நியாயம்தான் ஏது?
அடுத்தது அதிகாரப் பரவலாக்கல் அலகுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்ட அதிகாரங்களை, மத்திய அரசு மீளப் பெற முடியாமலும், அந்த அதிகாரங்களை மத்திய அரசு தான் பிரயோகிக்க இயலாமலும் இருப்பதை உறுதிப்படுத்தினால் அது சமஷ்டி அடிப்படைதான் என்பதே சம்பந்தன் சுமந்திரனின் வாதமாகும். அது தமிழ்த் தேசத்தின் இறைமையின் அடிப்படையிலான சமஷ்டியா?
சரி, அப்படியே வைத்துக் கொண்டாலும் அப்படிப் பகிர்ந் தளிக்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு மீளவும் பறிக்காமல் இருக்கின்றமையை உறுதி செய்யும் ஏற்பாடுகள் இடைக்கால அறிக்கையில் தெளிவாகவும் திட்டமாகவும் இல்லையே…!
இத்தகைய பின்புலத்தில் இந்த இடைக்கால அறிக்கையை நம்பி இதற்குப் பின்னால் தமிழர்கள் செல்வது எங்ஙனம்? சுமந் திரனின் பதிலை தமிழினம் எதிர்பார்க்கின்றது.
காலைக்கதிர் பத்திரிகை 2018.01.18 ஆசிரியர் தலையங்கம்




