தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது சுயநல அரசியலிற்காக எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி போராட்டம் செய்து மூக்குடைபட்டு வருகின்றது
தமது வங்குரோத்து அரசியலை நிமிர்த்துவதற்காக கடந்த காலங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் செயற்பட்டு வந்தனர்.இந்த நிலையில் தமது போராட்டங்களை திசை திருப்பி, அரசினை திருப்திபடுத்த முயல்கின்றது. தேர்தல் வெற்றிக்கு முன்னர் சரிந்து கிடந்த அரசியல் நிலையை மீள கட்டியெழுப்புவதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை பயன்படுத்தி, அதாவது அவர்களது உணர்வுகளை பயன்படுத்தி வருகின்றனர் என வடக்கு- கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்த நிலையில் வடக்கு- கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பால் கிளிநொச்சியில் ஒழுங்குபடுத்தப்பட்ட மக்கள் போராட்டத்தை குழப்பும் வகையிலும் இலங்கை அரசை திருப்திபடுத்தும் வகையிலும் தற்போது யாழில் குழப்பகரமான போராட்ட சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
போலியான அரசியல் தலைமைக்கு வாக்களித்தமையையிட்டு, மக்கள் தலைகுனிய வேண்டிய நிலைக்கு அவர்களின் செயற்பாடு தற்போது காணப்படுகின்றது. சுய இலாப அரசியலுக்காகப் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் செயற்பாட்டை சிதைக்கும் இவர்களது செயற்பாடு மிகவும் கண்டிக்கப்படவேண்டியவை.சக கட்சி உறுப்பினரின் வாக்கை கொள்ளையடித்து, வெட்கமின்றி அரசியல் செய்யும் இவர்களை மக்கள் அறிந்து செயற்பட வேண்டும்
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமது சுயநல அரசியலிற்காக எமது அமைப்பின் பெயரை பயன்படுத்தி போராட்டம் செய்து, மூக்குடைபட்டு வருகின்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தமது சுயநல அரசியலிற்காக பாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்களை சிதைத்து, கட்சி இலாபம் தேடி வருகின்றது என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பு, நேற்று சனிக்கிழமை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கையில் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளது.(15)