தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில்
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் முன்வைக்கப்படும் கோரிக்கைகள் தொடர்பாக அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் ஊடாக அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பின் போது, ஜனாதிபதியின் பொதுமன்னிப்பு தொடர்பிலும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான கோரிக்கைகள் தொடர்பிலும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சரவை பேச்சாளர் இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுமன்னிப்பு தொடர்பான பிரச்சினை வேறு, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் தீர்மானம் எடுப்பது என்பது வேறு பிரச்சினையாகும். இந்த விடயத்தில் குழப்பிக்கொள்ளக்கூடாது. தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் கோரிக்கைகள் கிடைக்கின்றன. தேவையானவாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் நடவடிக்கை எடுக்கும். அரசாங்கம் இது தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளது.
பாராளுமன்றத்திலும் பல தடவை கதைக்கப்பட்டுள்ளது. அத்துடன் நீதி அமைச்சு அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கும். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.




