செய்திகள்

தமிழ் தேசிய அரசியலும் வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளுதலும்

யதீந்திரா
வரலாற்றின் தவறுகளை மறப்போர் அதனை மீளவும் செய்வதற்கு சபிக்கப்பட்டவர்களாவர். இது, அமெரிக்க சிந்தனையாளர் ஜோர்ஜ் சத்நயணாவின் கூற்று. ஆனால் இந்த மொழிபெயர்ப்பு, ஈரோஸ் இயக்கத்தின் தலைவர் க.வே.பாலகுமாரனுடையது. இதே போன்று வரலாறு தொடர்பில் ஜேர்மனிய சிந்தனையாளர் ஹெகலின் கூற்றொண்டு. அதாவது, நாம் வரலாற்றிலிருந்து எதைக் கற்றுக் கொண்டிருக்கின்றோம் என்றால் எதையுமே கற்றுக்கொள்ளவில்லை என்பதை மட்டும்தான். நான் இங்கு கூறவரும் விடயம் நமது அரசியல் வரலாறு தொடர்பானதாகும். வரலாறு என்பது இறந்தகாலமாகும். இறந்த காலம் தொடர்பில் எதற்காக ஒருவர் சிந்திக்க வேண்டும்? நிகழ்காலத்தை வெற்றிகரமாக கையாள வேண்டுமாயின் நாம், நமது கடந்த காலத்தின் மாணவனாக இருக்க வேண்டும்.

தமிழ் தேசிய அரசியல் என்பது அடிப்படையில் அரசியல் அதிகாரத்தை கோருவதற்கான ஒரு கூட்டுணர்வாகும். தவிர விடுதலை என்னும் சொல் கொண்டு இதனை நோக்குவது அடிப்படையிலேயே தவறானதாகும். விடுதலை என்பது பரந்த பொருள் கொண்டது. ஆனால் தமிழ் தேசிய அரசியல் என்பது அரசியல் உரிமைசார்ந்தது மட்டும்தான். ஏனெனில் ஒரு வேளை தமிழ் மக்கள் கோரும் அரசியல் உரிமையை அடைந்துவிட்டால் கூட, அது முற்றிலுமான விடுதலை என்பதன் பொருள் அல்ல. உதாரணமாக வறுமைக் கோட்டின் கீழ் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடிமகன், வறுமையிலிருந்து விடுதலை பெற வேண்டும். அதே போன்று விடுதலையை பரந்த கோணத்தி;ல் நோக்குபவர்கள் அவர்களுக்கான விடுதலை சார்ந்து தொடர்ந்தும் இயங்கிக் கொண்டுதான் இருப்பார்கள். உதாரணமாக சாதியப்பாகுபாடில்லாத சமூகத்தை கோரும் ஒருவருக்கான விடுதலை, சாதியப்பாகுபாடு இல்லாமல் போகும் போது மட்டுமே கிட்டும். ஆனால் அரசியல் உரிமையில்லாத போது, ஏனைய விடுதலைத் தேவைகளுக்காக ஒருவர் செயலாற்ற முடியாது. இந்த அடிப்படையில்தான் முதலில் அரசியல் விடுதலையானது, அனைத்திற்குமான அஸ்திபாரமாக இருக்கின்றது.

இந்த அடிப்படையில்தான் அரசியல்ரீதியில் மாறுபட்ட அபிப்பிராயங்கள் இருந்த போதிலும் கூட, அரசியல் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்காக நாம் இயங்க வேண்டியிருக்கின்றது. ஆனால் அரசியல் தீர்வு தொடர்பில் சிந்திக்கும் போது, நாம், கடந்த காலத்தின் தவறுகளிலிருந்து கற்றுக்கொள்கின்றோமா அல்லது கடந்த காலத்தில் கற்பனைகளிலிருந்தே தொடர்ந்தும் சிந்திக்க முற்படுகின்றோமா என்பதுதான் முக்கியமானது. தமிழர்களின் கடந்த காலத்தை உற்று நோக்கினால், பல்வேறு சந்தர்பங்களை நாங்கள் இழந்திருப்பதை காணலாம். ஓவ்வொன்றுக்கும் அந்தக் காலத்திலிருந்தவர்களே காரணமாவர். இன்று நாம் சமஸ்டி அரசியல் தீர்வு தொடர்பில் பேசுகின்றோம். இந்த சமஸ்டிக் கோரிக்கையின் வரலாறு என்ன?

உண்மையில் சமஸ்டிக் கோரிக்கையின் சம்பியன்கள் தமிழர்கள் அல்லர். சிங்கள அரசியல்வாதிகள்தான் முதலில் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்திருந்தனர். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழக்கித்தில் கல்வியை பூர்த்திசெய்துவிட்டு நாடு திரும்பிய, ளு.று.சு.னு.பண்டாரநாயக்க இலங்கைக்கு சமஸ்டி முறைமையிலான ஆட்சி முறைமைதான் சிறந்ததென்று பரிந்துரைத்தார். இதனை ஏற்றுக்கொண்ட, கண்டிய சிங்கள தலைவர்கள், டொணமூர் ஆணைக்குழுவிடம் சமஸ்டியை பரிந்துரைத்தனர். இலங்கையை மூன்று சமஸ்டி அலகுகளாக பிரிப்பது பற்றி அவர்கள் குறிப்பிட்டனர். கண்டிய சிங்களவர்களுக்கு ஒரு சமஸ்டியலகும், கீழ்நாட்;டு சிங்களவர்களுக்கு ஒரு சமஸ்டியலகும், வடக்கு கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு ஒரு சமஸ்டியலகென்று, மூன்று சமஸ்டியலகுகளை பரிந்துரைத்தனர். இந்த பின்புலத்தில் நோக்கினால், வடக்கு கிழக்கு இணைப்பை முதலில் பரிந்துரைத்தவர்களும் சிங்களவர்கள்தான். நாம் வடக்கு கிழக்கு இணைப்பு தொடர்பில் சிந்தித்தது, 1985 திம்பு பேச்சுவார்த்தைக்கு பின்னர்தான். திம்பு பேச்சுவார்த்தையின் பின்னர்தான், வடக்கு கிழக்கு, தமிழ் மக்களின் தாயகம் என்னும் எண்ணக்கரு முன்வைக்கப்பட்டது. இந்த பின்புலத்தில்தான், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வரலாற்று வாழ்விடம் என்னும் தீர்மானம் உள்வாங்கப்பட்டது. ஆனால் இதற்கு பல தசாப்தங்களுக்கு முன்பதாகவே, கண்டிய சிங்களத் தலைவர்கள் இதனை பரிந்துரைத்தனர். ஆனால் அப்போதிருந்த தமிழர் தலைவர் (அவ்வாறு கருதப்பட்டவர்) பொன்னம்பலம் இராமநாதன், டொணமூர் ஆணைக்குழுவின் முன்னிலையில், பிராந்திய அடிப்படையிலான சமஸ்டி கோரிக்கையை ஆதரிக்கவில்லை. அதற்கு மாறாக, இன அடிப்படையிலான அரசியல் ஏற்பாட்டை கோரினார். இதனை டொணமூர் ஆணைக்குழு நிராகரித்தது. சிங்கள அரசியல்வாதிகள், பிராந்திய அடிப்படையிலான சமஸ்டிக் கோரிக்கையை ஆதரிக்கும் போதே, பொன்னம்பலம் இராமநாதனும் அதனை ஆதரித்திருந்தால், இலங்கையின் வரலாறு வேறுவிதமாக அமைந்திருக்கும். ஏன் பொன்னம்பலம் இராமநாதன் பிராந்திய அடிப்படையிலான சமஸ்டிக் கோரிக்கையை ஆதரிக்கவில்லை? ஏனென்றால், இராமநாதன் வடக்கு கிழக்கை சேர்ந்தவர் அல்லர். கொழும்பு மேட்டுக்குடியான இராமநாதன், தாங்கள் கொழும்பில் செல்வாக்குமிக்கவர்களாக இருக்க வேண்டும் என்னும் சுயநல நோக்கில் சிந்திதாத்தாரே தவிர, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதியாக சிந்திக்கவில்லை.
பொன்னம்பலம் இராமநாதனுக்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியலை பிரதிநிதித்துவம் செய்த, ஜி.ஜி.பொன்னம்பலம் (கஜன் பொன்னம்பலத்தின் பாட்டனார்) அகில இலங்கை தமிழ் காங்கிரஸை உருவாக்கினார். அவரும், பொன்னம்பலம் இராமநாதனின் அரசியலையே அரிச்சுவடியாகப்; பின்பற்றினார். இலங்கை என்னுமடிப்படையிலேயே சிந்தித்தார். பிராந்திய அடிப்படையிலான சமஸ்டி கோரிக்கையை முன்வைப்பதற்கு பதிலாக ஜம்பதிற்கு ஜம்பது என்னுமடிப்படையில் அரசியல் கோரிக்கையை முன்வைத்தார். அதனை சோல்பரி ஆணைக்குழு நிராகரித்தது. பொன்னம்பலங்களின் தவறுகளை சரிசெய்யும் நோக்கில்தான், எஸ்.ஜே.வி.செல்வநாயகம், 1949இல் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்து, இலங்கை தமிழரசு கட்சியை உருவாக்கினார். ஆங்கிலத்தில் சமஸ்டி கட்சியென்றே தமிழரசு கட்சி அடையாளப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் பிராந்திய அடிப்படையிலான சமஸ்டியை அடைவதே தமிழரசு கட்சியின் இலக்காக முன்வைக்கப்பட்டது. ஆனால் காலனித்துவ ஆட்சியின் போது, சமஸ்டிக் கோரிக்கையை ஆதரித்த சிங்கள அரசியல்வாதிகள், காலனித்துவத்திற்கு பின்னர் சமஸ்டியை ஏற்க மறுத்தனர். சமஸ்டியின் மூலம்தான் பிரச்சினையை தீர்க்க முடியுமென்று வாதிட்ட, பண்டாரநாயக்க, அரசியல்வாதியாக மாறிய பின்னர், அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தார். அதாவது, முன்னர் சிங்களவர்களின் கோரிக்கையாக மட்டுமே இருந்த சமஸ்டி, 1948இற்கு பின்னர் தமிழர்களின் கோரிக்கையாக மட்டும் மாறியது. இது எதனை உணர்த்துகின்றது? தமிழ் தலைவர்கள் என்பவர்கள் தூரநோக்கோடும், புத்திசாதுர்யமாகவும் செயற்பட்டிருந்தால், இன்று வடக்கு கிழக்கு ஒரு தனியான சமஸ்டி அலகாக இருந்திருக்கும். ஆனால் அப்போதிருந்த தமிழ் தலைவர்கள் என்போர், கொழும்புமைய அரசியல்வாதிகளாக இருந்தமையாமல், அவர்களின் எண்ணங்களும் சிந்தனையும் வேறுவிதமாக இருந்தது. வடக்கு கிழக்கிற்கு வெளியிலிருப்பவர்கள், வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் எதிர்காலத்தை தீர்மானித்தமையால் ஏற்பட்ட பிரச்சினையாகவே இதனை நோக்கலாம்.

தமிழரசு கட்சியின் உருவாக்கத்திற்கு பின்னர்தான், பிராந்திய அடிப்படையிலான தமிழ் தேசிய அரசியல் உருவாகியது. இதற்கு செல்வநாயகம் தலைமைதாங்கினார். செல்வநாயகம் சமஸ்டியை ஒரு இலக்காகக் கொண்டிருந்தாலும் கூட, சமஸ்டித் தீர்வை, ஒரு பாய்ச்சலில் அடைந்துவிட முடியுமென்று நம்பவில்லை. இதன் காரணமாகவே, பண்டா-செல்வா மற்றும் டட்லி-செல்வா ஆகிய உடன்பாடுகளின் மூலம் குறைந்தளவிலான உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அது சாத்தியப்படாத நிலையிலேயே, தனிநாட்டு கோரிக்கையை நோக்கி நகர்ந்தார். சமஸ்டியை ஒரு தனிப் பாய்ச்சலில் அடைந்துவிட முடியாதென்று நம்பியிருந்த செல்வநாயகம், எவ்வாறு தனிநாட்டை நோக்கி சிந்தித்தார்? சமஸ்டியையே அடைய முடியாமல் இருக்கின்ற போது, எவ்வாறு தனிநாட்டை அடைய முடியும்? சொல்வநாயகத்தின் பதில் மிகவும் சுலபமானதாகவே இருந்தது. அதாவது, நாங்கள் ஒரு நிலைப்பாட்டை முன்வைக்கின்றோம், அவர்கள் எங்களை வெளியில் தூக்கிவீசிவிடுவார்கள். ஆனால் அப்படி நடக்கவில்லை. செல்வாநாயக அணுகுமுறையின் தோல்வியிலிருந்துதான், ஆயுத இயக்கங்கள் எழுச்சியுறுகின்றன. 1970களுக்கு பின்னரான அரசியல் சூழலில் ஆயுத வழிமுறை தொடர்பிலான செயற்பாடுகள் தலைநீட்டத் தொடங்கியிருந்தாலும் கூட, 1980களுக்கு பின்னர்தான், ஆயுத இயக்கங்களாக அவைகள் எழுச்சியுற்றன. இந்த பின்புலத்தில்தான் பிராந்திய சக்தியான இந்தியாவின் தலையீடு நிகழ்ந்தது. இந்தியாவின் தலையீடு ஒரு விடயத்தை தெளிவுபடுத்தியது. அதாவது, வடக்கு கிழக்கை அடிப்படையாகக் கொண்ட, தனிநாடு ஒன்றை இந்தியா ஒரு போதும் ஆதரிக்காது. அதே வேளை அனுமதிக்கவும் மாட்டாது. இந்த பின்புலத்தில்தான் இந்திய-இலங்கை ஒப்பந்தம் இடம்பெற்றது. இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டு, அதிலிருந்து பயணிப்பதற்கான ஒரு வாய்ப்பு அன்றைய தமிழ் தலைவர்களுக்கு கிடைத்தது. இந்த ஒப்பந்தம் ஒரு வரப்பிரசாதமென்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் கூறியிருந்தார். ஒப்பந்தம் இடம்பெற்று 11வது நாளில் அமிர்தலிங்கம் தமிழ் நாட்டில் ஒரு உரையாற்றியிருந்தார். ஆனால் ஒப்பந்தத்தை ஆதரித்த அமிர்தலிங்கம், மாகாண சபை தேர்தலில் போட்டியிட மறுக்கின்றார். ஒப்பந்தம் சரியென்றால், அந்த ஒப்பந்தத்தின் விளைவான மாகாண சபை தேர்தல் தவறான ஒன்றாக இருக்க முடியுமா?

 

 

இந்தியாவின் உதவியுடன் முன்னோக்கி பயணிப்பதற்கான ஒரு வாய்ப்பு தமிழர்களின் கதவை தட்டியது. ஆனால் விடுதலைப் புலிகள் இயக்கமோ அதனை நிராகரித்தது. நிராகரித்தது கூட பிரச்சினையான விடயமல்ல. இந்திய படைகளுடன் மோதும் முடிவையெடுத்து, இறுதியில் ராஜீவ்காந்தியின் கொலையும் இடம்பெற்றது. இது தொடர்பில், 2006இல், பாலசிங்கம் தனது நேர்காணலில் குறிப்பிட்டிருக்கின்றார். இதற்காக வருந்துவதாகவும் கூறியிருந்தார். ஆனால் காலம் அதிகம் கடந்துவிட்ட நிலையில், பாலசிங்கத்தின் வார்த்தைகள் எவ்வித முக்கியத்துவத்தையும் பெறவில்லை. இந்த வரலாற்று அனுபவத்தில் தமிழ் தேசிய அரசியலை நோக்கினால், மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு வீணாகியது. அதாவது, இந்தியாவின், நிரந்தரமான ஆதரவுடன் முன்னோக்கி பயணிப்பதற்கான ஒரு வாய்ப்பும் தவறவிடப்பட்டது. குறைபாடுகள் இருந்தது என்பது உண்மை ஆனால், இந்தியாவை எதிரியாக்குவதன் மூலம், அந்த குறைபாடுகளை நிவர்த்திசெய்ய முற்பட்டதுதான் பாரதூரமான தவறானது. ஒப்பந்தத்தில் தமிழர்களுக்கு பங்கில்லையென்று கூறுவதும் தவறானது. ஒரு வேளை, இந்தியாவின் தலையீடு, ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிற்கும் பிரபாகரனுக்குமான ஒப்பந்தமாக சுருங்கிப் போயிருந்தால், பண்டா-செல்வா மற்றும் டட்லி-செல்வா உடன்பாடுகளுக்கு என்ன நடந்ததோ, அதுதான் இங்கும் நடந்திருக்கும். இரண்டு நாட்டு தலைவர்கள் கையெழுத்திட்டதால்தான் அது இன்றும் வலிதான ஒப்பந்தமாக இருக்கின்றது.

மூன்றாவது சந்தர்ப்பம் ஒன்றும் கிடைத்தது. நோர்வேயின் மத்தியஸ்தத்தின் மூலம் உருவான அமைதிச் சூழலில், சமஸ்டித் தீர்வொன்றை பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது. விடுதலைப் புலிகள் இயக்கம் (பிரபாகரன்) சமஸ்டியடிப்படையிலான அரசியல் தீர்வொன்றை ஏற்றுக்கொள்வதற்கான நிலைப்பாட்டை வெளிப்படையாக அறிவித்து, பேச்சுவார்த்தையை தொடர்ந்திருந்தால், சிறிலங்கா அரசாங்கம் ஒரு பொறிக்குள் அகப்பட்டிருக்கும். சமஸ்டியடிப்படையிலான அரசியல் தீர்வொன்றை பெறுவதற்கான வாய்ப்பு முற்றிலும் சாதகமாகவே இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பும் தவறவிடப்பட்டது.

இப்போது நமது கடந்த காலத்திலிருந்து நாம் எதை கற்றுக்கொள்ளப் போகின்றோம்? சந்தர்பங்கள் ஒவ்வொன்றையும் தவறவிட்டதால் நாம் அடைந்த பின்னடைவு என்ன? சந்தர்பங்களை பயன்படுத்தியிருந்தால் நாம் இன்று எவ்வாறனதொரு அரசியல் சூழக்குள் வாழ்ந்திருக்கலாம்? இந்த கேள்விகளிலிருந்து சிந்திக்க முடிந்தால் மட்டும்தான் நம்மால் நிகழ்காலத்தை கையாள முடியும்?