செய்திகள்

தலைவர்…பராக்!

தேர்தல் அரசியலிற்குள் மூழ்கிப்போயுள்ளது தமிழ்த் தேசிய அரசியல் வெளி.

மேய்ப்பனைத் தேடும் அரசியல் ஆய்வுகள் ஊடகங்களை நிரப்புகின்றன.

மக்கள் திரள் அரசியல் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை.

பிம்பக் கட்டமைப்பின் ஊடாக புதிய தலைவர்கள் உருவாக்கப்படுகிறார்கள்.

இதுதான் இன்றைய ஈழ தேசத்தின் அரசியல் நிலைமை.

சுமந்திரன் குறித்து ஒருவகையான ‘தலைமைப்பிம்பம்’ கட்டமைக்கப்படுகிறது.

இணையவெளிகளிலும், அச்சு ஊடகப்பரப்பிலும், திட்டமிட்டவகையில் இவை வடிவமைக்கப்படுகின்றன.

தமிழ்த் தேசிய அரசியலை, பௌத்த சிங்கள பேரினவாத கொழும்பு அரசியலுடன் இணைக்கும் சுமந்திரனின் அரசியல் நகர்வு, தொடர் சறுக்கலை சந்தித்தவாறே நகர்கிறது.

புதிய அரசியலமைப்பு வரைபு குறித்து ‘ ஜனநாயகப் பேரொளி'(!) ரணில் கொடுத்த ஒற்றையாட்சி விளக்கத்தால், சிங்களத்தோடான உறவுப் பாலம் உடைந்துவிட்டது.

எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பும் அறுந்துவிட்டது.

இதனால் சினமடைந்த நாடாளுமன்ற தமிழ்த் தலைவர்களை, சில அனைத்துலக பிராந்திய மேய்ப்பர்கள்  சந்தித்து ஆறுதல் வார்த்தைகள் கூறுகின்றனர்.

எப்படியாவது அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள் ரணில் கூட்டுக்கு சென்றுவிட வேண்டுமென்பதே இந்த சர்வதேச மேய்ப்பர்களின் எதிர்ப்பார்ப்பு.

ஆனாலும் எந்த தீபாவளித் தீர்வு வாக்குறுதியை வழங்கி, ரணிலுக்கு வாக்களிக்கச் சொல்வார்கள்  என்ற கேள்வியும் எழுகிறது.

இருக்கவே இருக்கிறார் மகிந்தர்.

அநேகமாக ‘மகிந்தர் வரக்கூடாது’ என்பதனை முன்வைத்து, ‘ரணிலுக்கு வாக்களியுங்கள்’ என்று மட்டுமே கூட்டமைப்பால் சொல்ல முடியும் என்று நம்பலாம்.

அதுதான் நடக்கும்.

பாவம் மக்கள்.

நன்றி புதினம் (இலண்டன்)