துருக்கியில் என்ன நடந்தது? எவ்வாறு இராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டது?
வெள்ளிக்கிழமை மாலை
இராணுவ சதிப்புரட்சி ஒரு ஆரம்பமாகி இருப்பதுபோல தெரிகிறது என்று இரண்டு இணைய கண்காணிப்பு நிறுவனங்களின் அறிவிப்பை தொடர்ந்து சமூக வலைத்தளங்களான பேஸ்புக், ட்விட்டர் மற்றும் யூ டியூப் ஆகியவற்றுக்கான இணைய தொடர்புகள் கட்டுப்படுத்தப்படுகின்றன . புரட்சி பற்றிய செய்தி உலகம் முழுவதும் காட்டுத் தீ போல பரவுகிறது.
இஸ்தான்புல்லின் வீதிகளில் இராணுவ நடமாட்டம் அதிகரிக்கிறது. நாட்டின் பிரதான விமான நிலையத்தின் அருகே இராணுவ டாங்கிகள் மற்றும் இராணுவ வாகனங்களின் பிரசன்னம் அதிகரிக்கிறது. நாட்டின் ஆசிய மற்றும் ஐரோப்பிய பகுதிகளை இணைக்கும் பாலங்களில் இராணுவ வாகனங்கள் நிறைகின்றன.
இராணுவ புரட்சி நடக்கிறது. வீடுகளுக்கு செல்லுங்கள் என்று இராணுவ வீரர்கள் பொதுமக்களை எச்சரிக்கின்றனர். கடைகள், உணவு விடுதிகள் மூடப்படுகின்றன.
அறிக்கை ஒன்றை விடுத்த இராணுவ தலைமை, இராணுவ புரட்சி நடக்கிறது என்று அறிவித்தது. இதற்கு பதிலளிக்கும் வகையில் ஜனாதிபதி தாயிப் எர்டோயனுக்கு நெருக்கமான ஊடகங்கள், இராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டுளளது என்றும் தாயிப் எர்டோயனின் அரசே பதவியில் இருப்பதாகவும் அறிவிக்கின்றன. அதேவேளை, ஜனாதிபதியின் பேச்சாளர் இராணுவத்திற்குள் ஒரு பிரிவினர் புரட்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் இது தோல்வியில் முடியும் என்றும் அறிவித்ததுடன் தொடர்புபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கிறார்.
வெள்ளிக்கிழமை இரவு
தலைநகர் அங்காராவில் துப்பாக்கி சூட்டு சத்தங்கள் கேட்கின்றன. இராணுவ விமானங்கள் மிகவும் தாழ்வாக வட்டமிடுகின்றன. பாராளுமன்றத்துக்கு அருகில் இராணுவ டாங்கிகள் தாக்குதலில் ஈடுபடுவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. சதி புரட்சியில் ஈடுபட்டவர்கள் துருக்கி தொலைக்காட்சிகளில் தோன்றி துருக்கி இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளதாகவும் ஜனாதிபதி துருக்கியின் மத சார்பற்ற பாரம்பரியங்களை இல்லாமல் செய்துள்ளதாக குற்றம் சாட்டியதுடன் நாடு ஒரு ‘ சமாதான சபை’ மூலம் ஆட்சி செய்யப்படும் என்று அறிவித்தார்கள்.
இதற்கு பதில் அளித்த ஜனாதிபதியின் பேச்சாளர், இராணுவத்தின் ஒரு பிரிவே புரட்சிக்கு ஆதரவளித்துள்ளதாகவும் ஜனாதிபதி எர்டோஜன் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
விடுமுறையில் சென்றிருந்த ஜனாதிபதி எர்டோஜன் ஒருவாறு சில தொழில்நுட்பங்கள் மூலம் தொலைக்காட்சிகளில் தோன்றி இராணுவ புரட்சிக்கு பதில் கொடுக்கும் வகையில் தனக்கு வாக்களித்த நாட்டு மக்களை பொது இடங்களிலும் விமான நிலையங்களிலும் திரளுமாறு அழைப்பு விடுத்ததுடன் ‘ மக்களின் அதிகாரத்தை விட மேலான எந்த அதிகாரமும் இல்லை’ என்று கூறினார். அத்துடன் நீதி சேவை இந்த புரட்சிக்கு தக்க பதில் கொடுக்கும் என்றும் அறிவித்தார்.
ஜனாதிபதி பாதுகாப்பாக இருப்பதாகவும் விடுமுறைக்காக மர்மாரிஸ் என்ற இடத்துக்கு சென்ற அவர் அங்கிருந்து பேசுவதாகவும் அதிகாரிகள் அறிவித்தனர். இராணுவ ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக இராணுவத்தின் சில உறுப்பினர்கள் அறிவித்தனர். பெரும் பண நெருக்கடி வரலாம் என்ற எதிர்பார்ப்பில் துருக்கி மக்கள் உணவு மற்றும் பணம் வழங்கும் இயந்திரங்களில் பணம் ஆகியவற்றை எடுப்பதில் மும்முரம் காட்டுகின்றனர்.
நள்ளிரவு
இராணுவ புரட்சிக்கு எதிராக பெருமளவில் மக்கள் திரளுகின்றனர். அங்காரா மற்றும் இஸ்தான்புல்லில் துப்பாக்கி பிரயோகம் நடப்பதாகவும் பலர் காயம் அடைந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது.
தனது விசுவாசியாக இருந்து பின்னர் எதிராக திரும்பிய பெத்துல்லா குல்லென் என்ற தற்போது அமெரிக்காவில் வாழும் ஒரு மதகுருவுக்கு ஆதரவான ஒரு இராணுவ பிரிவே புரட்சியில் ஈடுபட்டதாக ஜனாதிபதி அறிவிக்கிறார். ஆனால் இதை அவர் மறுக்கிறார்.
சிவில் நிறுவனங்கள், போக்குவரத்து நிலையங்கள், ஊடக நிலையங்கள் ஆகியவற்றின் மீது இராணுவம் கொண்டிருந்த கட்டுப்பாடு எதிர்பார்த்ததை விட குறைவே என்று அறியப்படுகிறது.
சனிக்கிழமை காலை
பிரதான விமான நிலையமான அட்டதுர்க் இல் வந்திறங்கிய ஜனாதிபதி தானே இன்னமும் பதவியில் இருப்பதாக அறிவிக்கிறார். புரட்சியில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கிறார். பல இராணுவ கேணல்கள் மற்றும் ஜெனரல்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்படுகிறது. ஆனாலும் தொடர்ந்து சண்டை நடைபெற்றது.
சில மணி நேரங்களின் பின்னர் சில இடங்களை முற்றுகை இட்டிருந்த இராணுவ பிரிவுகள் சில அவற்றில் இருந்து விலகி தமது கைகளை உயர்த்தியவண்ணம் சரண் அடைவது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படுகிறது.
60 பேர் இதுவரை இந்த புரட்சியின் போது உயிரிழந்தனர். இவர்களில் அநேகமானோர் பொதுமக்கள். புரட்சியில் ஈடுபட்ட 16 பேர் இராணுவ பொலிஸாருடன் இடம்பெற்ற சண்டையில் பலியாகினர். அங்காராவில் உள்ள ஜனாதிபதி மாளிகையை தாக்க முயன்ற 13 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். எல்லாமாக 1500 இராணுவ வீரர்கள் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் அஜயன் பிராந்தியத்துக்கு பொறுப்பான ஜெனரல் உட்பப பல சிரேஷ்ட அதிகாரிகள் அடங்குகின்றனர்.
இந்த புரட்சியில் கைதியாக பிடிக்கப்பட்டிருந்த இராணுவ படைகளின் தளபதி விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பாலம் ஒன்றுக்கு அருகில் பாதுகாப்பு எடுக்கும் ஒரு துருக்கி பிரஜை
















