செய்திகள்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு முன்னாள் இராணுவ அதிகாரி

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான வெற்றிடத்துக்கு ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

அரசியலமைப்புக்கான 17 ஆவது திருத்தத்தின்கீழ் ஸ்தாபிக்கப்பட்டு, பின்னர் நீக்கப்பட்டு, மீண்டும் 21 ஆம் திருத்தத்தின் ஊடாக நிறுவப்பட்ட, தலைவர் உள்ளடங்கலாக எண்மர் அடங்கிய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிகளுக்கான இரண்டு வெற்றிடங்கள் நிலவுகின்றன.

அவ்வெற்றிடங்களில் ஒன்றுக்கு யாழ் மாவட்ட முன்னாள் கட்டளைத்தளபதியும், புனர்வாழ்வுத் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளருமான மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) தர்ஷன ஹெட்டியாராச்சியின் பெயர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் பிரேரிக்கப்பட்டு, அரசியலமைப்புப்பேரவைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் உறுப்பினராக மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியை நியமிப்பது குறித்து கடந்த டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி அரசியலமைப்புப்பேரவையில் ஆராயப்பட்டதாகவும், அதற்கு சிவில் சமூகப்பிரதிநிதிகள் (எத்தனை பேர் என்பது பற்றி அறியமுடியவில்லை) தமது ஆட்சேபனையை வெளிப்படுத்தியதாகவும் அறியமுடிகின்றது. பேரவையில் சிவில் சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலாநிதி பிரதாப் ராமானுஜம், கலாநிதி டில்ருக்ஷி அனுலா விஜேசுந்தர மற்றும் கலாநிதி டினேஷா சமரரத்ன ஆகிய மூவர் அங்கம் வகிக்கின்றனர்.