நடிகர் கமல்ஹாசனுக்கு ஆதரவு கருத்து நடிகை கஸ்தூரிக்கு டுவிட்டரில் எதிர்ப்பு
கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி ஆதரவு தெரிவித்து இருக்கிறார். கலாசார பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும் என்று அவர் கருத்து வெளியிட்டு உள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், நடிகைகள் நமீதா, காயத்ரி ரகுராம், ஓவியா, ஆர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்கும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்துக்கு எதிராக உள்ளது என்றும், இதனை தடைசெய்து கமல்ஹாசன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி, திராவிட விடுதலைக்கழகம் ஆகிய அமைப்புகள் போலீசில் புகார் அளித்துள்ளன.
இதற்கு பதில் அளித்துள்ள கமல்ஹாசன் என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டு அபத்தமானது என்றார். சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. சட்டம் என்னை பாதுகாக்கும் என்றும் கூறினார்.
இந்த பிரச்சினையில் நடிகர் கமல்ஹாசனுக்கு நடிகை கஸ்தூரி ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது:-
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளவர்கள் 100 நாட்கள் வீட்டுக் காவலில்தான் உள்ளனர். அவர்களை ஏன் கைது செய்ய வேண்டும்.? முதலில் கலாசார பயங்கரவாதிகளிடம் இருந்துதான் தமிழ் கலாசாரத்தை காப்பாற்ற வேண்டும். இந்து மதம் உங்கள் தனிப்பட்ட சொத்து அல்ல. வேலி போட்டு பாதுகாக்க. இவ்வாறு கஸ்தூரி கூறியுள்ளார்.(15)




