நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் மீது நடமாடும் சேவையை குழப்பியதாக சேவை பெற வந்தவர்கள் குற்றச் சாட்டு
தமக்கான சேவையினை குழப்பும் முகமாக நாடாளுமன்ற உறுப்பினர் செ, கஜேந்திரன் தலைமையிலான குழு செயற்பட்டதாக சேவை பெற வந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.நீதி அமைச்சருக்கு எதிராக நாடாளுமன்றில் குரல் கொடுக்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர் , மக்கள் சேவை நடைபெறும் இடத்தில் வந்து அதனை குழப்பும் முகமாக செயற்பட்டமை எமக்கான சேவைகளை தடுக்கும் நோக்கமாகவே நாம் கருதுகிறோம் என சேவை பெற வந்திருந்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் , அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளிப்படுத்த வேண்டும். இதில் எமக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது. எமது உறவினர்களிலும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் உள்ளனர்.அதற்காக அமைச்சர் இல்லாத இடத்தில் மக்கள் சேவை இடம்பெறும் இடத்தினுள் அத்துமீறி நுழைந்து அதனை குழப்பும் செயற்பாடாக நாடாளுமன்ற உறுப்பினர் நடந்து கொண்டமை கண்டனத்திற்கு உரியதாகும்.
எமக்கான ஆவணங்களை பெறுவதற்கு நாம் கொழும்பு சொல்வதாயின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் சுமார் 15 ஆயிரம் ரூபாய் வரையில் செலவாகும்.இந்த நிலைமையில், இந்த நடமாடும் சேவை ஊடாக இலகுவாக ஆவணங்களை பெற்றுக்கொள்ள முடியும் என இங்கே வந்திருந்த போது , நாடாளுமன்ற உறுப்பினரின் தலைமையில் சிலர் இங்கு வந்து போராட்டம் செய்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சின் ஒழுங்கமைப்பில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடமாடும் சேவை நடைபெற்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்நிலையில் மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உள்ளிட்டவர்களுடன் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தினுள்ளும் நுழைந்து கோஷங்களை எழுப்பினர்.(15)




