நாட்டையும் இராணுவத்தையும் அரசாங்கம் காட்டிக்கொடுத்துவிட்டது: போராடத் தயாராகுமாறு மகிந்த மக்களுக்கு அழைப்பு
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் ஒரு பகுதியினர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாட்டை காட்டிக்கொடுத்துள்ளனர். இது வேதனைக்குரிய நிலையாகும். எவ்வாறாயினும் நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கும் இந்த அரசாங்கத்திற்கு எதிராக போராட அனைத்து மக்களும் எம்முடன் ஒன்றிணைய வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அழைப்பு விடுத்துள்ளார்.
யுத்தத்திற்கு அனைத்து வகையிலும் இடையூறு ஏற்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி எமது கட்சியை அடிமைப்படுத்தியுள்ளமை தொடர்பில் கவலை அடைகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்திருந்தார். அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2015 ஆம் ஆண்டில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதாக நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளரிடம் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் உறுதியளித்துள்ளனர். அந்த தீர்மானத்தின் விஷேடம் என்னவென்றால் அதனை இலங்கை அரசாங்கத்தினதாக ஏற்றுக் கொண்டு மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றிக் கொண்டமையாகும்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான அரசாங்கம் இலங்கைக்கு எதிரான இந்த தீர்மானம் தொடர்பில் செயற்பட்ட விதமானது 2002 ஆம் ஆண்டில் போர் நிறுத்தத்திற்காக செயற்பட்டதை போன்றே காணப்படுகிறது. இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு முன்னர் அதனை மாற்றியமைப்பதற்கு ஜெனிவாவில் உள்ள இலங்கை பிரதிநிதி செயற்பட்ட போதிலும் அதற்கு தடை ஏற்படுத்தி அமெரிக்காவின் தயாரிப்பின் பிரகாரமே நிறைவேற்றிக் கொள்வதற்கு அரசாங்கம் செயற்பட்டது. இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் இந்த தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் செய்யாது நிறைவேற்றி கொண்டு அதனை பாரிய இராஜதந்திர வெற்றியாக மக்களுக்கு காண்பிக்க முற்பட்டாலும் , 1815 ஆண்டில் உடரட்ட ஒப்பந்தத்தை போன்று நாட்டை காட்டிக்கொடுத்த ஒன்றாகவே அமைந்தது.
ஜெனிவா தீர்மானத்தின் ஊடாக அரசாங்கம் நிறைவேற்ற உள்ள விடயங்கள் தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்த வேண்டியதுள்ளது. இந்த தீர்மானத்தின் 1,4,6,7,8 மற்றும் 12 ஆகிய பிரிவுகளின் பிரகாரம் தமிழ் மக்களை கொலை செய்தமை , அவர்களை சித்திரவதை செய்தமை மற்றும் வடக்கில் திட்டமிட்டு உணவு தட்டுப்பாட்டை ஏற்படுத்தியமை உள்ளிட்ட போர் குற்றங்கள் புரிந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தினால் வெளி
யிடப்பட்ட பக்கச்சார்பான அறிக்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அந்த போர் குற்றங்களை விசாரணை செய்வதற்கு நீதி மன்றம் அமைத்தல் அதற்கு சர்வதேச நிதி உதவியை பெற்றுக் கொள்வதற்கும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
அது மாத்திரமன்றி போர் குற்றம் புரிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இராணுவ உறுப்பினர்களை போர் குற்ற நீதி மன்றத்திற்கு அழைப்பதற்கு போதிய சாட்சி இல்லாத நிலையிலும் அவர்களை இராணுவத்தில் இருந்து நீக்குவதற்கும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. அதே போன்று சிவில் பாதுகாப்பு சட்டத்தை மறுசீரமைக்கவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்யவும் அரசாங்கம் விருப்பத்தை வெளியிட்டுள்ளது.
ஜெனிவா தீர்மானத்தின் 16,18, மற்றும் 20 ஆகிய பிரிவுகளின் பிரகாரம் இலங்கையின் அரசியல் பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காக அதிகாரத்தை பகிரவும் அதனை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகத்தின் மேற்பார்வையில் முன்னெடுக்கவும் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் என்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விமர்சனத்திற்கு உள்ளான ஒன்றாகும். மேற்குலக சக்திகளின் நிதியில் தங்கி இருப்பதாக கூறி அதனை மாற்றியமைக்க ஒவ்வொரு வருடமும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுகின்றது. இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே இலங்கைக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
ஜெனிவா தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதன் ஊடாக நாட்டிற்கு எவ்விதமான பாதிப்பும் இல்லை என மக்களுக்கு காண்பிக்க அரசாங்கம் பல முயற்சிகளை எடுத்து வருகின்றது . போர் குற்ற விசாரணை பொறிமுறை தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் கடந்த நாட்களில் சர்வதேச ஊடகங்களுக்கு பரஸ்பர கருத்துக்களை கூறியதை அவதானிக்க முடிகின்றது. ஆனால் ஜனாதிபதியின் சுதந்திர தின உரையில் ஜெனீவா தீர்மானம் தொடர்பில் பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் கருத்து முரண்பாடு உண்மையாகவே இல்லை என்பது வெ ளிப்படுகின்றது. நாட்டின் ஜனநாயகம் , நல்லிணக்கம் மற்றும் இராணுவத்திற்கான கௌரவம் ஜெனீவா தீர்மானத்தை செயற்படுத்துவதன் ஊடாக வளர்ச்சி அடையும் என ஜனதிபதி தனது சுதந்திர தின உரையில் கூறியிருந்தார்.
அதன் பின்னர் பெப்ரவரி 6 ஆம் திகதி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஊடக சந்திப்பின் போது ஜெனிவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக உத்தியோகப்புர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கல பத்திரியை ஒன்றில் செய்தி வெளியானது. யுத்த வெற்றிக்கு எனது தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அரசாங்மே காரணமாகும். யுத்தத்திற்கு அனைத்து வகையிலும் இடையுறு ஏற்படுத்திய ஐக்கிய தேசிய கட்சி எமது கட்சியை அடிமைப்படுத்தியுள்ளமை தொடர்பில் கவலை அடைகின்றேன். 2007 ஆம் ஆண்டில வரவு செலவு திட்டத்தை தோல்வியடைய செய்து அரசாங்கத்தை கவிழ்த்து போரை நிறுத்த ஐக்கிய தேசிய கட்சி எடுத்த முயற்சியை யாரும் மறந்து விட முடியாது. இந்நிலையில் இவர்களின் இன்றைய செயற்பாடுகளை கண்டு நான் ஆச்சரியப்பட போவதில்ல்ைை
ஆனால் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு பகுதியினர் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து நாட்டை காட்டிக்கொடுக்கின்றமையை நினைத்து வேதனையடைகின்றேன். நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக்கொடுக்கம் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஒன்றிணைய வேண்டும்.
R-06




