நாட்டை ஆள்வது யார்?
முகுசீன் றயீசுத்தீன்
இன்றைய இலங்கை அரசியலில் நாட்டை ஆள்வது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆட்சி மாற்றம் என்ற பெயரில் 2015 ஜனவரியில் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டார். ஆனால் இன்று அவர்தானா நாட்டை ஆள்கிறார் எனக் கேட்கத் தோன்றுகிறது. அந்தளவுக்கு ஆள்பவர் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட 2 ஆம் குடியரசு யாப்பின்படி அரசின் தலைவர், அரசாங்கத்தின் தலைவர், ஆட்சித்துறைத் தலைவர், முப்படைகளின் பிரதம தலைவர், அமைச்சரவையின் தலைவர் என தலைமை அனைத்தும் தேசிய ரீதியிலான தேர்தலொன்றின் மூலம் மக்களால் தெரிவு செய்யப்படுகின்ற ஜனாதிபதிக்கு உரித்தாகும்.
1978 முதல் 2001 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு 17 ஆம் திருத்தம் மேற்கொள்ளப்படும் வரை ஜனாதிபதியின் அதிகாரங்களில் யாப்பு ரீதியாக எந்தக் குறைபாடும் பலவீனமும் ஏற்பட்டதில்லை. யாப்பின் முதலாம் அத்தியாயம் பாதுகாப்பு உள்ளிட்ட மக்களின் ஆட்சித்துறை அதிகாரங்களை ஜனாதிபதியே பிரயோகிக்க வேண்டும் என தெளிவாக எடுத்துக் கூறுகிறது.
ஜனாதிபதிக்கான இத்தகைய அதிகாரக் குவிப்பில் உள்ள அடிப்படை நியாயம் யாதெனில் அவர் தேசிய ரீதியில் நடத்தப்படுகின்ற தனியான தேர்தலில் மக்களால் நேரடியாகத் தெரிவு செய்யப்படுவதாக இருப்பதனாலாகும். இதனால் அவரது அதிகரித்த அதிகாரங்கள் காரணமாக அவர் ஒரு ‘யாப்புசார் சர்வாதிகாரி’ என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டார்.
2001 ஆம் ஆண்டு 17 ஆம் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் சில அதிகாரங்களில் குறிப்பிடத்தக்களவு குறைப்பு ஏற்படுத்தப்பட்ட போதிலும் 2010 ஆம் ஆண்டு 18 ஆம் திருத்தத்தின் மூலம் மீண்டும் ஜனாதிபதியின் அதிகாரங்கள் தூக்கி நிமிர்த்தப்பட்டன. எனினும் இப்பத்தியின் விமர்சனத்திற்குரிய வினா 2015 ஆம் ஆண்டு அரசியலமைப்புக்கு மேற்கொள்ளப்பட்ட 19 ஆம் திருத்தத்திலிருந்தே தொடங்குகிறது.
1978 – 2015 காலங்களில் நாட்டின் பிரதமர் பதவி என்பது எந்த வகையிலும் ஒரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சரை விட மேம்பட்டதாக இருந்திருக்கவில்லை. பிரதமரிடம் கேட்டே ஒரு விடயத்தை செய்ய வேண்டுமென்ற எந்தக் கட்டாயமும் அரசியலமைப்பில் இடம்பெற்றிருக்கவில்லை. ஒரு அமைச்சரை பதவி நீக்கி விடுவது போல பிரதமரையும் ஜனாதிபதி எளிதாகப் பதவியிலிருந்து அகற்றி விடலாம்.

எனினும் ஜனாதிபதியின் கட்சி பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பெற்றிருக்கின்ற போது ஜனபரிபதி தன் விருப்பத்தில் பிரதமரை நியமிக்கக்கூடிய நிலை இருப்பதால் பிரதமராகத் தெரிவு செய்யப்பட்டவர் சிலவேளை அமைச்சரவை அமைச்சரை விட தாழ்ந்த மட்டத்திற்கும் சென்று விடலாம்.
ஆனால் 19 ஆம் திருத்தம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் சிலவற்றை பிரதமருக்குப் பகிர்ந்தளித்துள்ளதுடன் பிரதமர் பதவியை ஸ்திரத்தன்மை கொண்டதாகவும் மாற்றியமைத்துள்ளது. அமைச்சரவை அமைச்சர்கள், ஏனைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் போன்றோரை ஜனாதிபதி நியமிக்கின்ற போதும் நீக்கும் போதும் பிரதமரின் ஆலோசனை அவசியமானதாகும். அத்துடன் பிரதமரைப் பதவி நீக்கும் அதிகாரமும் ஜனாதிபதியிடமிருந்து நீக்கப்பட்டு விட்டது.
மேலும் நாட்டின் அதிமுக்கிய பதவிகளுக்கான ஆட்களையும் ஆணைக்குழுத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களையும் ஜனாதிபதி தன் இஷ்டப்படி நியமித்து வந்த நிலை மாற்றப்பட்டு அரசியலமைப்புப் பேரவையுடன் இணைந்ததாக ஜனாதிபதி அந்நியமனங்களை மேற்கொள்ளும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்புப் பேரவையானது பாராளுமன்ற உறுப்பினர்கள் 7 பேரையும் பாராளுமன்றம் விரும்பும் வெளியாட்கள் 3 பேரையும் கொண்டது. அத்துடன் பாராளுமன்றம் ஜனாதிபதியால் அவரது விருப்பப்படி நான்கரை வருடங்களுக்குள் கலைக்கப்பட முடியாத ஸ்திரத்தன்மை பெற்றுள்ளது. அதனால் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்குப் பயப்படத் தேவையில்லை. இப்பாராளுமன்றத்தின் விருப்பு வெறுப்பு இப்போது பிரதமர் பக்கம் வந்துவிட்டது.
அதனால் ஜனாதிபதி எல்லாத் தலைமைப் பதவிகளை வகிக்கின்ற போதிலும் பிரதமருடன் அதிகாரங்களைப் பகிர்ந்து செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டார். இந்நிலையில் தான், நாட்டை இன்று இரு தலைவர்கள் ஆட்சி செய்வதாக இனங்காணப்படுகிறது.
பொது எதிரியான மஹிந்தவை தோற்கடித்து விட வேண்டும் என்று சிறீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர் மைத்திரிபால சிறிசேனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் 2015 ஜனாதிபதித் தேர்தலில் கைகோர்த்தனர்.
1999, 2005 ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிட்டு தோல்வியடைந்த ரணில் விக்ரமசிங்க முன்னர் இரு தடவைகள் அதிகாரமற்ற பிரதமர் பதவியில் இருந்து வந்த அனுபவம் கொண்டவர். எப்படியாவது ஜனாதிபதிக் கதிரையில் உட்கார்ந்து விட வேண்டுமென்ற அவரது அவா 2005 ஜனாதிபதித் தேர்தலில் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் சிதறிப் போனது.

2015 ஜனாதிபதித் தேர்தலில் வெல்வதற்கான வாய்ப்பில்லாத நிலையில் மஹிந்தவைத் தோற்கடிக்கும் பொது எதிரணியில் முக்கிய பாத்திரமேற்ற ரணில், சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒரு பகுதியோடு ஐக்கிய தேசியக் கட்சியை முழுமையாக ஈடுபடுத்தி தமது நோக்கங்களை நிபந்தனைப்படுத்தாமல், தேர்தல் விஞ்ஞாபனமாகவே அமைத்துக் கொண்டார்.
ஜனாதிபதியின் அதிகாரங்களில் சிலவற்றைக் குறைத்து நாட்டில் ஜனநாயகத் தன்மையை அதிகரிப்பது என்ற தொனியில் மைத்திரிபால ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதும் ரணில் பிரதமராகி 19 ஆம் திருத்தத்தின் கீழ் பிரதமர் பதவிக்கு குறிப்பிடத்தக்க அதிகாரங்களை முதலில் பெற்றுக் கொண்டார்.
இப்போது ஐக்கிய தேசியக் கட்சி என்ற தனித்துவமானதும் பலமானதுமான கட்சியொன்றின் தலைவராக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருக்கும் அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறீலங்கா சுதந்திரக் கட்சி முழுமை வாய்ந்ததாகவோ பலமானதாகவோ இல்லை. அடிப்படையில் அக்கட்சி இரண்டுபட்டுக் கிடக்கிறது.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனிமேல் தான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஆரம்பத்திலேயே தெரிவித்து விட்டதால் அதிகாரம் இல்லாத எதிர்காலத் தலைமையை நம்பி சிறீலங்கா சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பின்னால் தொடர்ந்து இருக்க விரும்ப மாட்டார்கள்.
இந்நிலையிலேயே இன்று உயர்ந்திருந்த ஜனாதிபதியின் அதிகார வலிமை சற்று தளர்வடைந்து தாழ்ந்திருந்த பிரதமரின் அதிகார வலிமை சற்று உயர்வடைந்து ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவருமே இன்று ஓர் உறைக்குள் இரு கூர்வாள்கள் போல் ஆகிவிட்டனர்.
அதனால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே அதிகார முரண்பாடுகள் ஏற்படுவது தவிர்க்க முடியாததே. எனினும் இம்முரண்பாடு வெளித் தெரிந்தால் அது பொது எதிரியான மஹிந்தவை பலப்படுத்தி விடும் என்ற காரணத்தினால் ஜனாதிபதியும் பிரதமரும் சிரித்துச் சிரித்துக் காலங் கடத்தி வருகின்றனர்.



